India

கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மனைவி.. காப்பாற்றிய பின்னர் கொலைசெய்த கணவர்.. நடந்தது என்ன ?

சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்டத்தில் உள்ள ரவ்னி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் ராம். இவரின் மனைவி ஆஷா பாய். மதுபோதைக்கு அடிமையான சங்கர் ராம் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் சண்டையிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 17-ம் நாள் வழக்கம்போல சங்கர் ராம் மது அருந்திவிட்டு நள்ளிரவு அன்று வீட்டுக்கு வந்துள்ளார். வந்தவர் மனைவியிடம் பாலியலுறவில் ஈடுபடுமாறு கூறியுள்ளார். ஆனால் இதற்கு அவரின் மனைவி ஆஷா பாய் மறுத்த நிலையில், சங்கர் ராம் மனைவியை வற்புறுத்தியுள்ளார்.

இதனால் கணவரிடமிருந்து தப்பிக்க மனைவி ஆஷா பாய் வீட்டின் பின்புறமிருந்து கிணற்றில் குதித்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சங்கர் ராம் கிணற்றில் குதித்து மனைவியை காப்பாற்றி மேலே கூட்டி வந்துள்ளார். ஆனால் பிரச்சனை அதன்பின்னரும் முடிவுக்கு வரவில்லை.

கிணற்றின் அருகிலேயே கணவன் மனைவி இருவரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சங்கர் ராம் தனது மனைவியை தாக்கி அவரின் பிறப்புறுப்பில் கொடூரமாக தாக்குதல் நடத்தி அவரை அடித்தே கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த அக்கபக்கத்தினர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் ஆஷா பாயின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கணவர் சங்கர் ராம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.