India

பாஜக ஆளும் உ.பி-யில் தொடரும் ரவுடிகளின் அராஜகம்: பட்டப்பகலில் கல்லூரி மாணவி சுட்டுக்கொலை - பகீர் சம்பவம்!

உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு எத்தகைய கொடூர நிலையில் இருக்கிறது என்பது ஊரறிந்த விஷயம். உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் மக்களின் அடிப்படை விருப்பங்களைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாத லட்சணத்தில்தான் சட்டம் - ஒழுங்கு இருக்கிறது.

மேலும் சிறுபான்மையினர், பெண்கள், எதிர்க்கருத்து சொல்பவர்கள், தலித்துகள் எனப் பலர் மீது பா.ஜ.க அரசு அராஜகப் போக்கைக் கையாண்டுள்ளது. இந்நிலையில் ரவுடிகளின் அராஜகங்களும் உ.பியில் தலைவிரித்தாடுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஐந்து முறை எம்.எல்.ஏ.வாகவும் ஒருமுறை எம்.பியாகவும் பதவி வகித்த அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஸ்ரஃப் அகமது ஆகியோர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் அத்திக் அகமதுவும், அவரது சகோதரர் அஸ்ரஃபும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய கல்லூரி மாணவியை இரண்டு பேர் சுட்டுக்கொன்ற சம்பவம் மேலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஜலான் மாவட்டத்தில் கல்லூரி மாணவி ரோஷ்னி அஹிர்வார் என்பவர் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது இருசக்க வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் கல்லூரி மாணவியை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். கை மற்றும் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ரோஷ்னி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் துப்பாக்கியால் சுட்ட நபர்களை அங்கிருந்தவர்கள் பிடிக்க முயன்றபோது அவர்களை அச்சுறுத்தி அவர்கள் மீது துப்பாக்கியை வீசிவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பியோடியுள்ளனர். மதிய வேளையில், கூட்டம் நெரிசலான சாலையில் இந்த சம்பவம் நடத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார் சிசிடிவு காட்சிகளை கொண்டு ஆய்வு செய்துவருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து யோகி அரசை கடுமையாக சாடி வருகின்றனர்.

Also Read: கேமராக்கள் முன் முன்னாள் MP-யை சுட்டுக்கொல்ல காரணம் இதுதான்- உ.பி படுகொலை குற்றவாளிகள் வாக்குமூலம் !