India

கேமராக்கள் முன் முன்னாள் MP-யை சுட்டுக்கொல்ல காரணம் இதுதான்- உ.பி படுகொலை குற்றவாளிகள் வாக்குமூலம் !

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராஜூபால். இவர் கடந்த 2005ம் ஆண்டு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது படுகொலை வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மேலும் இந்த வழக்கில் உமேஷ்பால் என்பவர் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டார்.

அவருக்கு அச்சுருத்தல் உள்ள நிலையில் கூடுதல் பாதுகாப்பு வழங்கவேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்த போதும் அது மறுக்கப்பட்ட நிலையில், உமேஷ்பாலை மர்ம கும்பல் நாட்டுவெடி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கொடூரமாக கொலை செய்தனர்.

இந்த வழக்கில் ஐந்து முறை எம்.எல்.ஏ.வாகவும் ஒருமுறை எம்.பியாகவும் பதவி வகித்த அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஸ்ரஃப் அகமது ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த கொலை வழக்கில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிரயாக்ராஜில் உள்ள மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது இருவரும் செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே, அங்கு செய்தியாளர்கள் வேடத்தில் இருந்த மர்ம நபர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அத்திக் அகமதுவும், அவரது சகோதரர் அஸ்ரஃபும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மாநிலத்தில் பிரபல ரவுடிகளாக வலம்வந்த அத்திக் அகமது மற்றும் அவரின் சகோதரர் கொலை செய்யப்பட்டது உத்தரப்பிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த சம்பவத்தின்போது போலிஸார் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த துப்பாக்கிசூட்டில் ஈடுபட்ட லவ்லேஷ் திவாரி (22), மோஹித் (23), அருண் மெளா்யா (18) ஆகிய 3 கொலையாளிகளை காவல் துறையினா் கைது செய்தனா். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது இந்த கொலைக்காக அதிர்ச்சி காரணம் தற்போது வெளியாகியுள்ளது. " நாங்கள் சிறையில்தான் சந்தித்தோம். சின்ன சின்ன குற்றங்கள் செய்தால் அதில் பெயர் கிடைக்காது.

இதனால் அத்திக் மற்றும் அவரின் சகோதரர் அஷ்ரஃப்பின் கும்பலை கொலை செய்து மாநிலத்தில் எங்களுக்கென பெயரையும் அடையாளத்தையும் உருவாக்கிக் கொள்ள நினைத்தோம். அதற்கான பலன் எதிா்காலத்தில் எங்களுக்கு கிடைக்கும் என்று கருதினோம். எனவே அத்திக்கும் அஷ்ரஃப்பும் போலீஸாரின் காவலில் இருப்பது தெரியவந்தது முதல், இருவரையும் கொல்ல திட்டமிட்டோம். இதையடுத்து செய்தியாளா்கள் போல் சென்று இருவரையும் கொன்றோம். அதன்பின்னர் போலிஸார் எங்களை மடக்கி பிடித்துவிட்டனர்" என்று கூறியுள்ளார். அவர்களின் இந்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: புல்வாமா தாக்குதல்: உளவு தகவல் இருந்தும் வீரா்களை சாலை வழியாக பயணிக்க வைத்தது ஏன்? - காங்கிரஸ் கேள்வி !