India

குழந்தைகளுக்கும் நாய்களுக்கும் திருமணம்.. விநோத காரணத்தை கூறி காலகாலமாக கடைபிடிக்கும் பழங்குடியின மக்கள்!

நம் நாட்டில் மூடநம்பிக்கைகளுக்கு பஞ்சமே இல்லை. கடவுள் முதல் சாத்தான் வரையுள்ள விஷயங்களுக்கு நம் மக்களிடம் மூட நம்பிக்கை பழக்கம் இருந்து வருகிறது. இதனால் பல்வேறு உயிர்கள் பலியாகி உள்ளது. இதுபோன்ற மூட நம்பிக்கையால் பலரும் தங்கள் பிள்ளைகள், உறவினர்கள் என நரபலி கொடுக்கின்றனர்.

அண்மையில் கூட கேரளாவில் வேலை செய்து வந்த பணிப்பெண்ணை பணக்காரர் ஆக வேண்டும் என்று நரபலி கொடுத்து சாப்பிட்டுள்ள சம்பவம் நாட் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தங்களுக்கு பிள்ளை பிறக்க வேண்டும் என்று எண்ணிய இளைஞர் ஒருவர் போலி சாமியார் பேச்சைக்கேட்டு பக்கத்து வீட்டு சிறுமியை கடத்தி நரபலி கொடுத்த சம்பவமும் அரங்கேறியது.

இதுபோன்ற மூட நம்பிக்கைகளால் பிள்ளைகளின் வாழ்க்கை உட்பட பலரது வாழ்க்கையும் பலியாகிறது. முன்பெல்லாம் கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற மூட நம்பிக்கை மக்களிடம் நிலவியது. தற்போது அதையெல்லாம் முறியடித்துதான் வானிலை அறிக்கை வாயிலாக மழை, புயல் உள்ளிட்டவற்றை மக்கள் அறிந்து கொல்கிறார்கள்.

இந்த சூழலில் வீட்டில் இருக்கும், பிள்ளைகளை பிடித்திருக்கும் தீய சக்தி ஓடி போக வேண்டும் என்று அந்த வீட்டு பிள்ளைகளுக்கும், அங்கிருக்கும் நாய்களுக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர் ஒரு பழங்குடி இன மக்கள். இதனால் பிள்ளைகள் மனது பெரிதும் பாதிக்கப்படும் என்றெல்லாம் அவர்களுக்கு தோன்றவில்லை. மாறாக இல்லாத தீய சக்தியை இருப்பதாக நம்பி அதனை விரட்டி விட மக்கள் இதுபோன்ற விஷயங்களை செய்து வருகின்றனர்.

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் அமைந்துள்ளது சோரா என்ற கிராமம். இங்கு பந்த்சாகி என்ற பழங்குடியின இனம் மக்கள் வசித்து வருகின்றனர். வழக்கமாக ஒவ்வொரு பழங்குடியின மக்களுக்கும் ஒவ்வொரு பழக்கம் உள்ளது. அந்த வகையில் இந்த மக்களுக்கும் ஒரு பழக்கம் உள்ளது. அதாவது அங்கிருக்கும் குழந்தைகளுக்கும் நாய்களுக்கும் திருமணம் செய்து வைப்பது.

அந்த கிராமத்தில் வளரும் குழந்தைகளின் (ஆண் / பெண்) மேல் தாடையில் முதல் பற்கள் வளர்ந்த பிறகு அவர்களை தீய சக்தி பிடித்து விடுமாம். எனவே அதனை விரட்டுவதற்கு நாய் ஒன்றை பிடித்து அதனுடன் திருமணம் செய்து வைப்பர். பெண் பிள்ளைக்கு ஆண் நாயுடனும், ஆண் பிள்ளைக்கு பெண் நாயுடனும் திருமணம் செய்து வைப்பர்.

இந்த நிகழ்வில் வழக்கமாக இருக்கும் திருமண சீர்களும் இடமபெற்றிருக்கும். பிள்ளைகளுக்கும் நாய்களுக்கும் திருமணம் செய்து வைத்து அழகு பார்ப்பர். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கூட தப்பன் என்ற 11 வயது ஆண் பிள்ளைக்கு பெண் நாயுடனும், லட்சுமி என்ற 7 வயது பெண் பிள்ளைக்கு ஆண் நாயுடனும் திருமணம் செய்து வைத்தனர்.

இது தொடர்பான செய்திகள் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மேலும் அந்த மக்கள் இவ்வளவு மூட நம்பிக்கை உடையவராக உள்ளார்களா என்றும் மக்கள் விமர்சித்து வருகின்றனர். இதனால் பிள்ளைகள் மனம் வேதனை அடையும் என்ற எண்ணம் பெற்றோர்களுக்கு கொஞ்சம் கூட இல்லை.

Also Read: தங்கம் வாங்க வந்த தெலுங்கானா தம்பதி.. நகை வியாபாரியிடம் அறிமுகம் செய்து நூதன கொள்ளை - விசாரணையில் பகீர் !