India

ஒரே வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட 6 பேர்.. கொசுவர்த்தியால் நேர்ந்த விபரீதம்.. டெல்லியில் பெரும் சோகம் !

பொதுவாக உலகளவில் ஒரு பெரும் தொல்லைக்கு மக்கள் உள்ளாகுகின்றனர் என்றால் அது கொசுவால்தான். உலகளவில் அதிகமான உயிரிழப்புக்கு காரணம் கொசுவால் வரும் நோய்தான் என்று ஒரு கணக்கெடுப்பும் கூறுகிறது. இதனால் முற்காலத்தில் எல்லாம், புகைமூட்டியை வைத்து கொசுக்களை விரட்டி வந்தனர்.

அதற்காக காய்ந்த இலைகள், குறிப்பாக வேப்பிலைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் கொசுவர்த்தி என்று சுருள் வடிவில் வந்தது. அதன்பிறகு பத்தி, தற்போது லிகியூட் வடிவில் கொசுக்களை விரட்டுவதற்கு ஆயுதம் போன்று உருவாக்கப்பட்டு மக்களால் பயன்படுத்த வருகிறது. நாடு முழுவதும் உள்ள மக்கள் இதுபோன்ற கொசுவர்த்திகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் இதனை அதிகமாக பயன்படுத்தி வந்த குடும்பம் ஒன்று நேற்று இரவு நேரத்தில் அதில் இருந்த விஷ வாயு தாக்கி உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் அமைந்துள்ளது சாஸ்திரி பார்க். இங்கு குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளது. இந்த பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த குடும்பத்தினர் தினமும் கொசுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டு தூங்குவது வழக்கம். அந்த வகையில் சம்பவத்தன்று இரவும் கொசுத்தொல்லை காரணமாக கொசுவர்த்தி ஏற்றிவைத்து விட்டு அனைவரும் தூங்கியுள்ளனர்.

மறுநாள் காலை அவர்களது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் கதவை தட்டி பார்த்துள்ளனர். அப்போதும் திறக்கவில்லை என்பதால் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளே செல்லும்போதே காவல் அதிகாரிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனால் உள்ளே சென்றதும் வீட்டில் உள்ள அனைத்து ஜன்னல்களையும் திறந்துள்ளனர். தொடர்ந்து வீட்டில் இருந்த 6 பேரும் மூச்சு பேச்சு இல்லாமல் கீழே சரிந்து கிடந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து அவர்களது உடல்களை உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். பின்னர் அவர்களது வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகளுக்கு கொசுவர்த்தியின் துகள்கள் அதிகமான இடங்களில் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் விசாரணையை தொடங்கினர். அப்போது அவர்கள் வீட்டில் கொசுத்தொல்லை காரணமாக கொசுவர்த்தி வைத்து தூங்கினர்.

சம்பவத்தன்று அதிகமாக கொசுவர்த்தி ஏற்றி வைத்ததால் அதில் இருந்து வெளியான கார்பன் மோனாக்சைடு விஷ வாயுவை சுவாசித்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொசு விரட்டியின் விஷத்தால் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்திள்ளது.

Also Read: பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் தங்க, வைர நகைகள் மாயம்.. வீட்டு பணியாளர்கள் மீது சந்தேகம் !