India

2 நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்ட போக்ஸோ குற்றவாளி.. மர்ம முறையில் மரணம்.. மும்பையில் அதிர்ச்சி !

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பாந்திரா பெர்ரி கிராஸ் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் இனாயத் அலி சாஜன். 48 வயதான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இவரை விசாரித்தனர்.

அப்போது குற்றம் நிரூபணம் ஆகியுள்ளது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் அந்த குற்றவாளி விசாரணையின்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளனர்.

அதாவது சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து காவல்துறையினர் குற்றவாளியை விசாரித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவருக்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். அப்போதும் அவருக்கு சரியாகவில்லை என்பதால் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரது உடலை உடற் கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது போக்ஸோ குற்றவாளி உயிரிழந்துள்ளது மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “அரசு பங்களாவை காலி செய்ய தயார்..” - தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து ராகுல் காந்தி கடிதம் !