India

திருமணம் செய்ய வற்புறுத்தல்.. ஆசிரியையை வன்கொடுமை செய்து கொலை செய்தவர் கைது.. ஆந்திராவில் பரபரப்பு !

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் பொண்டலவாடா கிராமத்தில் வசித்துவந்த 24 வயது இளம்பெண் பக்கத்து நகரம் ஒன்றில் இயங்கிவந்த தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது கிராமத்தில் இருந்து நடிமிட்டோட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜாபர்வாலி (30) என்பவரின் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட பழக்கம் இருவருக்கும் இடையில் காதலாக மாறியுள்ளது. திருமணம் செய்வதாக கூறி ஜாபர்வாலி அந்த ஆசிரியையுடன் பலமுறை தனிமையில் இருந்துள்ளார். அதன்பின்னர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த ஆசிரியை கூறியநிலையில், அதற்கு ஏதும் காரணத்தை கூறி ஜாபர்வாலி நாட்களை கடத்திவந்துள்ளார்.

இதுமட்டுமின்றி நாட்கள் செல்ல செல்ல அந்த பெண்ணுடன் பேசுவதையும் ஜாபர்வாலி தவிர்த்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த ஆசிரியை ஜாபர்வாலியின் வீட்டுக்கு சென்று அவரின் பெற்றோர்களை சந்தித்து நடந்த சம்பவங்களை கூறி ஜாபர்வாலிக்கும் தனக்கும் திருமணம் செய்துவைக்குமாறு கூறியுள்ளார்.

அப்போதுதான் ஜாபர்வாலிக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றுள்ளதும், அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் தன்னை இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் ஜாபர்வாலிவின் பெற்றோர் அந்த ஆசிரியையை சமாதானம் கூறி அங்கிருந்து அனுப்பியுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து தங்கள் மகன் ஜாபர்வாலியிடமும் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியைக்கு போன் செய்து பேசிய ஜாபர்வாலி தான் உன்னை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும், அங்குள்ள சாய்பாபா கோவில் ஒன்றில் சந்திக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

அதன்படி அந்த பெண் அங்கு வந்த நிலையில், அங்கிருந்து தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்று தனிமையில் இருக்கலாம் என அந்த ஆசிரியையிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த நிலையில், ஆசிரியையை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்,

மேலும், அந்த ஆசிரியையின் போனை எடுத்து அவரின் தங்கைக்கு "நான் ஒருவரை காதலிக்கிறேன். அவரை திருமணம் செய்ய வாய்ப்பு இல்லாததால் தற்கொலை செய்து கொள்கிறேன்" என மெசேஜ் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து இதுகுறித்து போலிஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் ஜாபர்வாலியை பிடித்து விசாரணை நடத்தியபோது திருமணம் செய்ய வற்புறுத்தியதால் ஆசிரியையை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து ஜாபர்வாலியை கைது செய்த போலிஸார் அவரை சிறையில் அடைந்தனர் .

Also Read: ஸ்ட்ரெச்சர் இல்லாததால் போர்வையால் இழுத்துச்செல்லப்படும் முதியவர்.. பா.ஜ.க ஆளும் மாநிலத்தின் அவலநிலை !