India

மூடநம்பிக்கையின் உச்சம்.. 10 வயது சிறுவனை நரபலி கொடுத்த உறவினர்: உ.பி-யில் கொடூர சம்பவம்!

உத்தர பிரதேச மாநிலம், பர்சா கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா வர்மா. இவரது மகன் விவேக். இவர் கடந்த 23ம் தேதியிலிருந்து காணவில்லை. மகனைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தந்தை கிருஷ்ணா வர்மா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கிராமத்திற்கு அருகே உள்ள வயலில் கழுத்து அறுக்கப் பட்ட நிலையில் சிறுவன் உடலம் ஒன்று இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

பிறகு அங்குச் சென்று பார்த்தபோது சடலமாக இருந்த சிறுவன் காணாமல்போன விவேக் என்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை யார் கொலை செய்தது என போலிஸார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.

உயிரிழந்த சிறுவனின் உறவினர் அனூப். அவர் அதே கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது 2 வயது மகன் மனநலம் பாதித்துள்ளார். இதனால் அவரை பல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றும் சரியாகவில்லை.

பின்னர் அனூப் ஒரு மந்திரவாதியைச் சந்தித்துள்ளார். அப்போது அவர் நரபலி கொடுத்தால் உங்கள் குழந்தையின் மன நலப்பிரச்சனை தீர்ந்துவிடும் என கூறியுள்ளார். இதை நம்பிய அனூப், உறவுக்கார சிறுவன் விவேக்கை நரபலி கொடுக்க திட்டமிட்டுள்ளார். இதன்படி சிந்தாராம் என்பவருடன் சேர்ந்து கொண்டு சிறுவன் விவேக்கைக் கடத்து சென்றுள்ளார்.

பின்னர் சிறுவன் விவேக்கை நரபலி கொடுத்து கொலை செய்து உடலைக் கிராமத்தின் அருகே வீசிவிட்டு வந்தது போலிஸார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அனூப், சிந்தாராம், மந்திரவாதி ஆகிய மூன்று பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

10 வயது சிறுவன் நரபலி கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: போதை ஆசாமிகளுக்கு ஷாக்.. ட்ரோன் மூலம் பிடிபட்ட கும்பல்: 8 பேரை சிறையில் அடைத்த திருப்பூர் போலிஸ்