India

“நா சொன்னா கேக்கமாட்ட..” மருமகள் தலையில் செங்கலால் அடித்த மாமனார்.. தலைநகரில் தொடரும் கொடூரம்! -பின்னணி?

இந்தியாவில் முன் காலத்தில் எல்லாம் பெண்களுக்கு படிக்கக் கூட முடியாத சூழ்நிலை இருந்தது. இதற்காக முற்போக்கு சிந்தனைகொண்டவர்கள் பல்வேறு போராட்டங்கள், பல கட்ட ஆர்ப்பாட்டங்கள் செய்து அவர்களை படிக்க வைத்தனர். தொடர்ந்து தற்போது வரை பெண்கள் படிக்க வேண்டும் என்று இந்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.

அதோடு பெண்கள் படித்து முடித்து வேலைக்கு சென்று தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று அரசுகள் பலகட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பல தடைகளையும் மீறி சில பெண்கள் படிக்கவும், வேலைக்கும் செல்கின்றனர். இப்படி தங்கள் சொந்த காலில் நிற்க முயற்சிக்கும் சில பெண்களை அவர்கள் குடும்பத்தார் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

அப்படி திருமணம் செய்யும் பெண்கள், சிலர் தங்கள் புகுந்த வீட்டில் ஒரு அடிமை போல் வாழ்ந்து வருகின்றனர். அப்படி ஒரு நிகழ்வுதான் டெல்லியிலும் அரங்கேறியுள்ளது. கணவன் குடும்பத்தாரை மீறி இளம்பெண் வேலைக்காக செல்ல முயன்றதால் ஆத்திரமடைந்த மாமனார், அவரது தலையை செங்கல்லை கொண்டு அடித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள பிரேம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் காஜல். 27 வயது இளம்பெண்ணுக்கு பிரவீன் குமார் என்பவருடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு தற்போது 3 வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது. BSc படித்து முடித்திருக்கும் இந்த பெண் திருமணம் முடிந்து கணவர் குடும்பத்தாரை மட்டுமே கவனித்து வந்துள்ளார்.

இவரது கணவர் பிரவீன் குறைந்த சம்பளத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவரது சம்பளத்தால் குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலை இருந்துள்ளது. இதனால் காஜல் வேலைக்கு செல்ல முடிவு செய்து குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் பெண் சம்பாதித்து, குடும்பம் நடத்துவதா என்ற ஈகோவால், அவரை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

தொடர்ந்து அவரும் முயன்றபோதும் கணவர் மற்றும் மாமனார் இதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி அவர்களது பேச்சை கேட்காமல் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது அவரை இருவரும் தடுக்க முயன்றுள்ளனர். அதையும் மீறி அவர் சென்றுள்ளார். எனவே அவர் பின்னல் சென்ற மாமனார், அந்த பெண்ணை வீட்டுக்கு திரும்ப கூப்பிட்டுள்ளார்.

இதில் விடாப்பிடியாக இருந்த மருமகள் மீது மாமனாருக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாமனார், அருகில் இருந்த செங்கல்லை கொண்டு மருமகளின் தலையில் தாக்கியுள்ளார். தொடர்ந்து தாக்கியதில் மருமகளும் நிலைகுலைந்து இரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.

இதையடுத்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வந்தது. தொடர்ந்து இதுகுறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தன்னை தனது மாமனார்தான் தாக்கியதாக மருமகள் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தீவிர விசரணையில் ஈடுபட்டனர். அப்போது மாமனார் தாக்குவது குறித்த சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றினர். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி கண்டங்களை எழுப்பி வருகிறது. தொடர்ந்து இந்த சம்பவம் தலைநகர் டெல்லியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: விருந்துக்கு அழைத்து தம்பதி வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை: ஓராண்டுக்கு பின் உறவினர் சிக்கியது எப்படி?