India

“ஒரு கதை சொல்லு ராம்..” - மணமேடையில் உறங்கிய மணமகன்.. மணமகள் எடுத்த அதிரடி முடிவு !

பொதுவாக திருமணம் என்பது பெரியோர்களால் பெண், மாப்பிள்ளை வீட்டு சார்பாக நிச்சயிக்கப்பட்டு உற்றார் உறவினரை அழைத்து நடக்கும். சிலர் காதல் திருமணம் செய்துகொள்வர். மேலும் சிலர் லவ்-கம் அரேஞ் திருமணம் செய்துகொள்வர். இப்படி நடக்கும் திருமணங்கள் சில நேரங்களில் இறுதி கட்டம் வரை நின்று போய் விடும்.

அதற்கு வரதட்சணை, குற்றம், இறப்பு என பல காரணங்கள் இருக்கும். ஆனால் இங்கு ஒருவர் திருமண மேடையிலேயே போதையில் தூங்கியதால் திருமணம் நின்றுபோயுள் சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தால் மணமகன் வீட்டார் பெரும் மன உளைச்சலில் உள்ளனர்.

அசாம் மாநிலம் நல்பார் என்ற பகுதியை சேர்ந்தவர் பிரசன்ஜித். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி கடந்த 5 நாட்களுக்கு முன்னர் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது.

பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் வட இந்திய முறைப்படி இரவு நேரத்தில் நடைபெற்றது. அப்போது மணமேடையில் மாப்பிள்ளை திருமண சடங்குகள் செய்துகொண்டிருந்தார். பண்டிதர் கூற கூற ஒவ்வொரு மந்திரத்தை சொன்ன அவர், திடீரென சோர்வடைந்து தூங்கப்போவதாக கூறியுள்ளார். மேலும் மணமேடையில் இவரது அருகே இருந்த நண்பர்களின் மடியில் படுத்து உறங்கினார்.

உறவினர்கள் அவரை எழுப்ப முயன்றும் அவர் எழுந்திருக்கவில்லை. இதையடுத்தே அவர் போதையில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று மணமகளும் விடாப்பிடியாக கூறவே, திருமணமும் நின்றுள்ளது.

இதையடுத்து திருமணம் நின்ற கையோடு மாப்பிள்ளை செய்த வேலைகளை, பெண் வீட்டார் காவல்துறையில் புகாராக அளித்தனர். அந்த புகாரில், "மணமகன் குடிபோதையில் மேடையிலேயே உறங்கிவிட்டார். அவர் 95% போதையில் இருந்தார். எனவே அவரை எழுப்பியும், அவர் எழுந்திருக்கவில்லை. இதனால் தற்போது நாங்கள் மன உளைச்சலில் உள்ளோம். எனது மகளும் மன உளைச்சலில் உள்ளார். திருமணத்துக்கு செலவு செய்த பணத்தை மணமகன் வீட்டார் தர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் மணமேடையில் உறங்கிய மணமகனால், மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ள சம்பவம் அசாமில் அரங்கேறியுள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: விருந்துக்கு அழைத்து தம்பதி வீட்டில் 35 சவரன் நகை கொள்ளை: ஓராண்டுக்கு பின் உறவினர் சிக்கியது எப்படி?