India

தன்னையும் ஆட்டிசம் பாதித்த மகனையும் நிர்க்கதியாக்கி விட்டார்: Zoho CEO ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி புகார்!

உலகின் முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் ஒன்றான Zoho நிறுவனத்தின் சி.இ.ஓ. ஸ்ரீதர் வேம்பு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் அமெரிக்காவில் தனது மனைவி மற்றும் மகனுடன் வாழ்த்து வந்தார். பின்னர் 2020ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கே வந்துவிட்டார். இங்கிருந்து கொண்டு தனது பணியைக் கவனித்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலர் என்று போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆட்டிசம் குறைபாடு உள்ள தன் மகனையும், தன்னையும் 2020-ஆம் ஆண்டு நிர்க்கதியாக விட்டுச் சென்று விட்டதாக ஸ்ரீதர் வேம்புமீது அவரது மனைவி புகார் அளித்துள்ளார். இந்த செய்தியை போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

அதில் புகார் கூறும் ஸ்ரீதர் வேம்புவின் மனைவி பிரமிளா ஸ்ரீனிவாசன், "என்னுடைய கணவரும் நானும் 29ஆண்டுகள் ஒன்றாக வசித்து வந்தோம். எங்களுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தை உள்ளது.

ஆனால் இப்போது என்னையும், தனது மகனையும் ஸ்ரீதர் வேம்பு கைவிட்டுவிட்டார். அவர் எங்கள் இருவரையும் கவனித்துக் கொள்ளவே இல்லை. எங்களுக்கு பொதுவாக இருந்த சொத்துக்களை அவரது சகோதரி மற்றும் சகோதரி கணவர் பெயருக்கு வேம்பு மாற்றிவிட்டார்.

கலிபோர்னியாவின் சட்டப்படி மனைவியின் ஒப்புதல் இல்லாமல் சொத்துக்களைக் கணவர் விற்க முடியாது. வேம்பு தனது உறவினர் பெயர்களில் சொத்துக்களை மாற்றியது சட்டவிரோதமானது" என தெரிவித்துள்ளார். இவரின் இந்த குற்றச்சாட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு ஸ்ரீதர் வேம்பு மறுப்பு தெரிவித்துள்ளார். அவரின் விளக்கத்தில், "நான் யாருக்கும் எந்த சொத்துக்களையும் மாற்றவில்லை. என் மனைவியையும், மகனையும் தமிழ்நாட்டுக்கு என்னுடன் வர வேண்டும் என சொன்னேன். ஆனால் அவர்கள் வரவில்லை. அங்கேயே உள்ளனர். நான் அவர்களைக் கைவிடவில்லை" என தெரிவித்துள்ளார்.

Also Read: பொய்யான தகவல்களை காட்டி அதிக கட்டணம் வசூலிக்கும் விமான நிறுவனங்கள்: நாடாளுமன்ற நிலைக்குழு குற்றச்சாட்டு!