India

”இந்தியாவில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது”.. உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில்!

உலகம் முழுவதும் உள்ள தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். ஆனால் மற்றவர்களைப் போன்று அவர்களும் மனிதர்கள்தான் என்பதை இந்த சமூக அமைப்பு கண்டுகொள்ளாமல் அவர்களை ஒதுக்கிவைக்கவே நினைக்கிறது.

இருப்பினும் தங்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து இவர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாகவும் தற்போது பல குரல்கள் சேர்ந்துள்ளது. இதன் காரணமாகத்தான் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா ஆகிய நாடுகளில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என இவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு குறித்து ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. அதில், தன்பாலினத்தவர்கள் இணைந்து வாழ்வது இந்தியக் குடும்பக் கொள்கையுடன் ஒப்பிடத்தக்கது அல்ல.

கணவன் ஆணாகவும், மனைவி பெண்ணாகவும் இருந்து இவர்கள் இருவருக்கும் பிறக்கும் குழந்தை ஆகியோரை கொண்டதே குடும்ப அமைப்பாகக் கருத முடியும் என பிரமாணப் பத்திரத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவு குற்றமற்றதாக மாற்றப்பட்ட போதிலும், ஒரே பாலின திருமணத்திற்கு நாட்டின் சட்டங்களின் கீழ் அங்கீகரிக்கப்படுவதற்கு மனுதாரர்கள் அடிப்படை உரிமை கோர முடியாது என்று ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து ஒன்றிய அரசின் இந்த பதிலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: "ட்விட்டரை தொடர்ந்து திவாலான வங்கிக்கு ஸ்கெட்ச் போட்ட எலான் மஸ்க்" -இணையவாசிகள் கிண்டல் !