India

20வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த OYO நிறுவனரின் தந்தை: சோகத்தில் ரித்தேஷ் அகர்வால் குடும்பம்!

இந்தியாவின் மிகப்பெரிய ஹோட்டல் புக்கிங் நிறுவனம் OYO. இந்த நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் ரிதேஷ் அகர்வால். இவரது தந்தை ரமேஷ் அகர்வால். இவர் குருகிராமில் உள்ள DLF The Crest, Sector 54 அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் 20வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நடக்கும் போது மகன் ரித்தேஷ் அக்கவர்வால்,மருமகள் மற்றும் மனைவி ஆகியோர் உடனிருந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, “எங்கள் வழிகாட்டும் ஒளி மற்றும் வலிமையான எனது தந்தை ஸ்ரீ ரமேஷ் அகர்வால் மார்ச் 10 அன்று காலமானார் என்பதை கனத்த இதயத்துடன் நானும் எனது குடும்பத்தினரும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

அவர் ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்தார், ஒவ்வொரு நாளும் என்னையும் நம்மில் பலரையும் ஊக்கப்படுத்தினார். அவரது மறைவு எங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். எனது தந்தையின் பரிவும் அரவணைப்பும் எங்களின் கடினமான காலங்களில் எங்களைக் கண்டு முன்னேறியது.

அவருடைய வார்த்தைகள் நம் இதயத்தில் ஆழமாக ஒலிக்கும். இந்த துயரமான நேரத்தில் எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்" என வேதனையுடன் ரித்தேஷ் அகர்வால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் டெல்லியில் ரித்தேஷ் அகர்வாலுக்குத் திருமணம் நடைபெற்றது. இதில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த மகிழ்ச்சியில் குடும்பமே இருந்த நிலையில் ரமேஷ் அகர்வால் உயிரிழந்துள்ளது அவர்களது குடும்பத்திற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி 55 வயது முதியவர் அடித்து கொலை.. தொடரும் இந்துத்துவ கும்பல் அராஜகம்!