India

மனைவியை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டிக்குள் மறைத்த கணவர்.. சத்தீஸ்கரில் பயங்கரம்.. நடந்தது என்ன ?

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் என்ற பகுதியை அடுத்துள்ளது உஸ்லாபூர். இங்கு பவன் சிங் தாக்கூர் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சதி சாஹு என்ற பெண்ணும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் காதலை அடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தொடர்ந்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கணவர் பவனுக்கு தனது மனைவி மீது சந்தேகம் வந்துள்ளது. தனது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகமடைந்த கணவர் அவருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

தொடர்ந்து இருவருக்கும் இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. அதன்படி சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கணவர், தனது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். அதோடு தனது வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தை கொண்டு அவரை வெட்டியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்தார். தொடர்ந்து மனைவியின் சடலத்தை மறைக்க எண்ணியுள்ளார். அதன்படி தனது மனைவியின் உடலை பல துண்டுகளாக வெட்டி தண்ணீர் தொட்டிக்குள் வைத்துள்ளார். இப்படி சுமார் 2 மாதங்கள் ஆகவே, அக்கம்பக்கத்தினருக்கு பவன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கூறியுள்ளனர்.

அதனை பவன் செவி மடுக்காததால், போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் வீட்டில் வந்து சோதனை செய்தனர். அப்போது வீட்டில் இருக்கும் தண்ணீர் தொட்டிக்குள் துர்நாற்றம் வீசுவது தெரியவந்தது. தொடர்ந்து அங்கு நடத்திய சோதனையில் உடல் பாகங்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பவனை கைது செய்த அதிகாரிகள், உடல் பாகங்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக அவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டிக்குள் போட்டு வைத்த கணவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இதே போல் டெல்லியில் ஷ்ரதா வாக்கர், நிக்கி யாதவ் உள்ளிட்ட பெண்களையும் அவர்களது காதலர்கள் துண்டு துண்டாக வெட்டி தூக்கி வீசியெறிந்துள்ள சம்பவம் அரங்கேறி நாட்டையே உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தாய்க்கு விஷம் கொடுத்து, தற்கொலை செய்துகொண்ட மகன்.. சோகத்தில் மூழ்கிய கிராமம்.. பின்னணி என்ன ?