India

16 முறை கத்தியால் குத்திய காதலன்.. நடு ரோட்டில் துடிதுடித்து இறந்து போன காதலி.. பெங்களூருவில் கொடூரம் !

ஆந்திர மாநிலம் காக்கிநாடா என்ற பகுதியை சேர்ந்தவர் லீலா பவித்ர நலமதி. 25 வயதாகும் இவர் பெங்களூரு அருகே இருக்கும் முருகேஷ்பாளையம் என்ற பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அதேபோல் ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்தவர் தினகர் பனலா. 28 வயதாகும் இவர், பெங்களுருவில் உள்ள டொம்லூர் என்ற பகுதியில் மற்றொரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

வெவ்வேறு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர்கள், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்து நண்பர்களாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் அது காதலாக மாற தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். தற்போது இருவரும் திருமணம் செய்ய எண்ணியபோது, லீலா தனது வீட்டில் தனது காதல் குறித்து தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ந்த பெற்றோர், காதலுக்கு மறுப்பு தெரிவித்தனர்.

அதோடு தினகர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தை கூறி லீலாவின் பெற்றோர் மறுத்துள்ளனர். இதனால் லீலாவும், தனது காதலனிடம் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கூறியுள்ளார். மேலும் தன் பெற்றோர் மீறி தன்னால் எதுவும் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு அமைந்திருந்தது. தொடர்ந்து திருமணத்திற்கு தினகர் வலியுறுத்தி வந்துள்ளார். அப்போதும் லீலா மறுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று லீலா நிறுவனத்திற்கு வெளியே தினகர் காத்திருந்தார். லீலா பணி முடிந்து வெளியே வந்தபோது, இருவருக்குமிடையே இந்த விஷயம் குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தினகர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து லீலாவை சரமாரியாக குத்தியுள்ளார்.

மேலும் லீலாவை 16 முறை கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு கொடுக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், தினகரை கைது செய்தனர். அதோடு லீலாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட தினகரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

5 ஆண்டுகாலமாக காதலித்து வந்த காதலியை திருமணம் செய்ய மறுத்த காரணத்தினால் நடு ரோட்டில் வைத்து 16 முறை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன் செயல் பெங்களூருவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: படுக்கையிலே உயிரிழந்த தாய்.. உறங்குவதாக நினைத்து 2 நாட்கள் அருகிலே தூங்கிய சிறுவன்.. கர்நாடகாவில் சோகம்!