India

தன் உயிரை கொடுத்து 11 வயது மகள் உயிரைக் காப்பாற்றிய தாய்.. மனதை உலுக்கும் திக் திக் சம்பவம்!

சத்தீஸ்கர் மாநிலம் கொர்பா மாவட்டம் டிலியமர் கிராமத்தைச் சேர்ந்தவர் துவசியா பாய். இவரது 11 வயது மகள் ரிங்கி. இவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிராமத்தின் அருகே உள்ள விவசாய நிலத்தில் மண் எடுப்பதற்காகச் சென்றுள்ளனர்.

அங்கு, மகளை ஒரு இடத்தில் அமரவைத்துவிட்டு தாய் துவசியா பாய் மண் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டுப்பன்றி ஒன்று சிறுமி ரிங்கை தாக்க ஓடிவந்துள்ளது.

இதைப்பார்த்த தாய் அதிர்ச்சியடைந்து அந்த காட்டுப்பன்றியை மண்வெட்டியால் தாக்கியுள்ளார். பிறகு அந்த பன்றி துவசியா பாயை கொடூரமாகத் தாக்கியுள்ளது. இருப்பினும் அவர் பன்றியை மகள் அருகே நெருங்க விடாமல் சண்டைபோட்டுள்ளார்.

அப்போது அவர் இங்கிருந்து தப்பிச் செல்லும்படி மகளிடம் கூறியுள்ளார். பிறகு மகள் அங்கிருந்து ஓடிச் சென்று கிராம மக்களிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார். உடனே இது குறித்து வனத்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

பிறகு அவர்கள் அங்கு வந்துபார்த்த போது ரத்த வெள்ளத்தில் தாயும், காட்டுப்பன்றியும் சடலமாகக் கிடந்தனர். இதைப்பார்த்து மகள் ரிங்கி கதறி அழுத காட்சி காண்போரைக் கண்கலங்க வைத்தது.

இதையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காட்டுப்பன்றி தாக்கி உயிரிழந்த துவசியா பாய் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் இழப்பீடாக ரூ.25,000 நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பிரிட்ஜுக்குள் இருந்த 2 கால்கள்.. தலை, உடல் எங்கே? - கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரபல மாடல் அழகி: பின்னணி?