India

மணமேடையில் உயிரிழந்த பெண்.. மாப்பிள்ளைக்கு தங்கையை திருமணம் செய்துவைத்த குடும்பம்.. - குஜராத்தில் சோகம் !

குஜராத் மாநிலம் சுபாஷ்நகர் என்ற பகுதியில் வசித்து வருபவர் ரத்தோர். இவரது மூத்த மகள் ஹீத்தல் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விஷால் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணம் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், சம்பவத்தன்று மணமக்கள் இருவரும் மேடைக்கு வந்தனர்.

தொடர்ந்து திருமண சடங்குகள் நடைபெற்று வந்தது. அப்போது மணமகள் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். இதில் பதறிப்போன மணமக்கள் வீட்டார் அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்தனர். இருப்பினும் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததால் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கே அவரை சோதனை செய்த மருத்துவர்கள், மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இருப்பினும் தங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணிய மணமகன் வீட்டார், ஹீத்தலின் தங்கையை பெண் கேட்டுள்ளனர். திருமணம் முடிக்க வேண்டும் என்று எண்ணிய பெற்றோர், தங்கள் இரண்டாவது மகளை கொடுக்க சம்மதித்துள்ளனர்.

அதன்படி உயிரிழந்த ஹீத்தலின் உடல் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு, மணமேடைக்கு தங்கை சென்று திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து திருமணம் சடங்குகள் அனைத்தும் முடிந்த பிறகு, உயிரிழந்த ஹீத்தலின் உடலை பெற்று , அவரது குடும்பத்தார் இறுதிச் சடங்குகளை செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அசோகத்தை ஏற்படுத்தியது.

மணமேடையில் இருக்கும்போதே மணப்பெண் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததால், அவரது தங்கையை திருமணம் செய்து வைத்த பெற்றோரின் செயல் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

அண்மைக்காலமாக இளம் வயதில் மாரடைப்பு காரணமாக பலரும் இறந்து வருகின்றனர். இதே போல் அண்மையில் கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்தார். அதே பள்ளி சிறுவன் ஒருவரும் உயிரிழந்தார். நேற்று ரிசெப்ஷன் நிகழ்ச்சியில் நடனமாடி கொண்டிருந்தபோது 19 வயது இளைஞர் ஒருவர் பொத்தென்று கீழே விழுந்து உயிரிழந்தார். கர்நாடகவிலும் கல்லூரி மாணவர், தனது கல்லூரி விழாவின்போது நடனமாடி கொண்டிருந்தபோது மயக்கமடைந்து உயிரிழந்தார்.

கடந்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் மணமேடையில் இருக்கும்போதே மணப்பெண் மாரடைப்பு காரணமாக சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளது தொடர்பான வீடியோ வெளியானது. து போன்ற சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.