India

டெல்லிக்கு வருவதையே அசவுகரியமாக கருதுகிறேன் -இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் கருத்தால் சர்ச்சை !

இந்தியாவிலேயே அதிகம் மாசடைந்த நகரமாக டெல்லி திகழ்ந்து வருகிறது. இதன் காரணமாக குளிர்காலத்தில் பொதுமக்கள் அங்கு சுவாசிக்கவே முடியாத அளவு சிரமத்தை சந்திப்பதும் வழக்கமாக உள்ளது. இதற்கு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் மக்கள் தொகை அடர்த்தி காரணமாக மாசு மேலும் மேலும் அதிகரித்தவண்ணமே இருக்கிறது.

தற்போது அகில இந்திய மேலாண்மை கூட்டமைப்பின் நிறுவன விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனரான நாராயண மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டத்தில் பேசிய அவர், " நான் டெல்லிக்கு வருவதையே அசவுகரியமாக கருதுகிறேன். ஒழுங்கினம் மோசமாக உள்ள நகரங்களில் ஒன்றாக டெல்லி உள்ளது. நான் விமான நிலையத்தில் இருந்து வந்து கொண்டிருந்த போது கவனித்தேன். சிவப்பு சிக்னலில் பல கார்களும், பைக்குகளும் சிக்னல் விதிமுறைகளை மீறி பயணிக்கின்றன. ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் கூட காத்திருக்க நம்மால் முடியாதா ?

இந்தியாவில் பிறர் திருடும் போது அதை பார்த்து சிரித்து கொண்டே அமைதியாக இருந்தால் உன்னை நல்லவன் என்பார்கள். ஆனால், நான் அப்படி அல்ல. தவறு என்றால் எழுந்து நின்று மரியாதையான முறையில் தவறை சுட்டுகாட்டுவேன். நமது தனிப்பட்ட சொத்துக்களை பராமரிப்பதை போலவே பொது சொத்துக்களையும் பராமரிக்க சொல்லித் தர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அவரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், அவரின் கருத்துக்கு சிலர் விமர்சனமும் தெரிவித்து வருகின்றனர். காரில் சென்றபடி இருக்கும் இவர்களுக்கு பொதுமக்களின் நிலை புரியாது என்ற ரீதியில் விமர்சனம் எழுந்துள்ளது.

Also Read: “மக்கள் பெயில் ஆக்கினாலும் மோடி பாஸ் போட்டு ஆளுநராவோம் என்பதே இறுமாப்புதான்..” -தமிழிசைக்கு சு.வெ பதிலடி!