India

“12-ம் வகுப்பு மாணவி எப்படி மைனர்..?” - போக்ஸோ வழக்கில் போலிஸாரிடம் டெல்லி நீதிபதி கேள்வி !

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் உள்ள சுல்தான்புரி பகுதியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி காணாமல் போனதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் மாணவி இருக்கும் இடத்தை சில நாட்களுக்கு பின்னர் கண்டறிந்தனர். ஆனால் அதற்குள்ளும் மாணவிக்கு திருமணம் ஆகியிருந்தது. இதனால் மாணவியை மீட்ட அதிகாரிகள் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் அவரை திருமணம் செய்த இளைஞர் மீது போக்ஸோ, கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய இது தொடர்பான வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மாணவியின் சம்மத்தோடுதான் இருவருக்கும் உடலுறுவு ஏற்பட்டதாகவும், எனவே போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் மாணவி சிறுமி இல்லை என்றும் இளைஞர் தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று டெல்லி நீதிமன்றத்தில் நீதிபதி ரஜ்னிஷ் பட்நாகர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது மனு மீதான விஷயத்தை நீதிபதி கேட்டறிந்தார். பின்னர் நீதிபதி, காவல்துறையிடம் அந்த பெண் மைனர்தானா, எதனடிப்படையில் இவர் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று கேட்டார்.

ஆனால் அதற்கு போலீஸ் தரப்பு வழக்கறிஞரோ, "மாணவி 12-ம் வகுப்பு படிக்கிறார் என்பதால் அவர் மைனராகதான் இருப்பார் என்ற யூகத்தின் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டது" என்றார்.

இந்த விளக்கத்தை கேட்ட நீதிபதி, "அது எப்படி யூகத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய முடியும். இது தவறான விஷயம். இதற்குரிய ஆவணங்களை முறையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இன்று இந்த வழக்கில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி ஏன் ஆஜராகவில்லை? அடுத்தமுறை அவர் நிச்சயம் ஆஜராக வேண்டும்." என்று உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கு வரும் மார்ச் மாதம் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்த மாணவி, தற்போது அவரது கணவருடன் மகிழ்ச்சியாக வாழ்வதாக கூறப்படுகிறது.

Also Read: டெல்லிக்கு வருவதையே அசவுகரியமாக கருதுகிறேன் -இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் கருத்தால் சர்ச்சை !