India

திருமண செலவுக்காக ATM-ல் கொள்ளையடிக்க முயன்ற வாலிபர்.. போலிஸாரிடம் சிக்கியது எப்படி?

விழுப்புரம் மாவட்டம் வானூரை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் புதுச்சேரி நகரப் பகுதியில் 14 தனியார் வங்கி ATM எந்திரங்களின் பராமரிப்பை கவனித்து கொண்டு வருகிறார். அதன்படி நேற்று அவர் பணியில் இருந்தபோது, அவரது செல்போனுக்கு லெனின் வீதியில் உள்ள ATM மையத்தில் இருந்து அலெர்ட் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.

இதனால் பதறிய மூர்த்தி இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலை அடுத்து போலிஸார் ATM மையத்திற்குச் சென்று பார்த்தபோது வாலிபர் ஒருவர் ATM எந்திரத்தை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்ததைக் கண்டனர்.

பின்னர் உடனே போலிஸார் அந்த வாலிபரைப் பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். இதில் கன்னியாகுமரி மாங்கோடு பகுதியைச் சேர்ந்த அணு என்பதும், இவர் கடந்த இரண்டு மாதங்களாகப் புதுச்சேரியில் தங்கி உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தது தெரிந்தது.

மேலும், வீட்டில் பெண் பார்த்து வருவதால் திருமண செலவுக்காகப் பணம் தேவைப்படும் என்பதால் திருவண்ணாமலையில் நடந்த கொள்ளை சம்பவத்தை டிவியில் பார்த்து, அதேபாணியில் ATM எந்திரத்தை உடைத்துக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அணு மீது வழக்குப்பதிவு செய்த போலிஸார் ATM எந்திரத்தை உடைக்க பயன்படுத்திய மெஷினை பறிமுதல் செய்து அவரை நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்தி காலாபட்டு சிறையில் அடைத்தனர்.

Also Read: 450 சவரன் கொள்ளை வழக்கு.. தீரன் அதிகாரம் ஒன்று பட பாணியில் குற்றவாளியை அடையாளம் கண்ட தமிழ்நாடு போலிஸ்!