India

ஆந்திரா :இறந்துபோன குழந்தை.. ஆம்புலன்ஸ் இல்லாததால் 120 கி.மீ ஸ்கூட்டியில் சடலத்தை கொண்டுசென்ற பெற்றோர் !

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கிங் ஜார்ஜ் என்ற அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த கடந்த 2ஆம் தேதி மகேஸ்வரி என்ற பெண் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு அவருக்கு குழந்தையும் பிறந்துள்ளது.

ஆனால், பிறந்த குழந்தைக்கு சுவாச பிரச்சனை போன்ற குறைபாடுகள் இருந்த நிலையில், மருத்துவர்கள் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

அதன்பின்னர் இந்த சம்பவத்தை குழந்தையின் பெற்றோரிடம் கூறி குழந்தையின் சடலத்தை எடுத்துச்செல்ல கூறியுள்ளனர். அதன்பின்னர் குழந்தையின் சடலத்தை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் அளிக்குமாறு பெற்றோர் கேட்ட நிலையில், அதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனால் வேறு வழியின்றி விசாகப்பட்டினத்தில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்களுடைய சொந்த ஊரான குமுடு என்ற கிராமத்துக்கு இருசக்கர வாகனத்தில் குழந்தையின் சடலத்தை பெற்றோர் எடுத்து சென்றனர். அதன்பின்னரே அங்கு ஆம்புலன்ஸ் வந்து குழந்தையின் சடலம் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இதனிடையே குழந்தையின் சடலத்தை பெற்றோர் இரு சக்கர வாகனத்தில் எடுத்துச்சென்ற வீடியோ வெளியாகி மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனை நிர்வாகம் சார்பில், ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யும் முன்னர் பெற்றோர் தங்கள் குழந்தையின் சடலத்தை மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறாமல் சென்று விட்டதாக கூறியுள்ளது.

Also Read: "அதானியின் வீழ்ச்சி இந்திய ஜனநாயக மறுமலர்ச்சிக்கான கதவை திறக்கும்" -அமெரிக்க தொழிலதிபர் கருத்து !