India

வீட்டுக்கு தெரியாமல் கோவா சென்று LOVERS DAY கொண்டாடிய இளம் ஜோடி.. இறுதியில் நடந்த சோகம் !

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படும். இவ்வாறு கொண்டாடப்படும் காதலர் தினத்தில் காதலர்கள் தங்கள் காதலை பரிமாறிக்கொள்ள பல விஷயங்களை செய்வர். காதலனோ/ காதலியோ தங்கள் காதலருக்கு விருப்பமான விஷயத்தை கொடுத்து திக்குமுக்காட செய்வர்.

அதன்படி இந்தாண்டு நேற்று உலகம் முழுவதும் இது கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தில் முக்கியமாக 'ரோஜா' பார்க்கப்படுகிறது. எனவே நேற்று ரோஜா பூவின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. நேற்று கொண்டாடப்பட்ட இந்த தினத்தில் முக்கியமான பல்வேறு இடங்களில் காதலர்கள் மகிழ்ச்சியாக சுற்றி திரிந்தனர்.

சில காதலர்கள் தங்கள் காதலர் தினத்தை கொண்டாட பீச், தியேட்டர், பார்க், என அதிகமான இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியாக இருப்பர். சிலர் வெளியூர்களுக்கு செல்வர். இதில் பல காதலர்கள் பெற்றோர்களுக்கு தெரியாமலே தங்கள் காதலருடன் காதலர் தினத்தை கொண்டாடுவர். அவ்வாறு நேற்று தங்கள் காதலர் தினத்தை கொண்டாடிய காதல் ஜோடி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் விபு சர்மா (27) - சுப்ரியா (26). இவர்கள் இருவரும் உறவினர் ஆவர். சுப்ரியா பெங்களுருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவா செல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்படி கடந்த 2 - 3 நாட்களுக்கு முன்னர் கோவா சென்றுள்ளனர்.

இவர்கள் இருவரும் கோவா சென்றது குடும்பத்தாருக்கு தெரியாத நிலையில், இருவரும் அங்கே மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். கடந்த 13-ம் தேதி இரவு இருவரும் பலோலம் கடற்கரையில் சுற்றி திரிந்துள்ளனர். மறுநாள் காதலர் தினம் என்பதால் இருவரும் நள்ளிரவு நேரத்திலும் அங்கேயே இருந்துள்ளனர். அதோடு கடலில் குளித்து விளையாடி மகிழ்ந்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் அலையில் சிக்கி கடலில் மூழ்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மீட்பு படையினருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், இருவரையும் நீண்ட தேடுதலுக்கு பிறகு மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து யார் இவர்கள் என்று தீவிர விசாரணை நடத்தியபோது, இருவரும் உ.பி-யை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. பின்னர் அவர்களது குடும்பத்தாருக்கு சம்பவம் குறித்து காவல்துறை அதிகரிகள் தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டுக்கு தெரியாமல் காதலர் தினத்தை கொண்டாட கோவா வரை சென்ற காதல் ஜோடி, அங்குள்ள கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ரயில் என்ஜின்,தண்டவாளத்தை தொடர்ந்து காணாமல் போன ஓடிக்கொண்டிருந்த சரக்கு ரயில் - மராட்டியத்தில் அதிர்ச்சி!