India

உரிமையாளரின் தலையை கடித்துத் துப்பிய ஒட்டகம்.. ராஜஸ்தானில் நடந்த கொடூர சம்பவம்!

ஒட்டகம் கோபப்பட்டால் அதன் உரிமையாளரைக் கூட விட்டுவைக்காது என்று ஒரு பழைய பழமொழி உள்ளது. இந்த பழமொழியை உண்மையாக்கும் வகையில் ராஜஸ்தானில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானேரின் பஞ்சு கிராமத்தைச் சேர்ந்தவர் சோஹன்ராம் நாயக். இவர் ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஒட்டகம் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடியது.

இதையடுத்து சோஹன்ராம் நாயக் அந்த ஒட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளார். அப்போது ஆவேசத்துடன் இருந்த ஒட்டம் திடீரென அவரது தலையை வாயால் கடித்து துண்டாக்கித் தூக்கி வீசியுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வந்தனர். அப்போது சடலமாக இருந்த சோஹன்ராம் நாயக்கைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் ஆவேசத்துடன் இருந்த ஒட்டகத்தைக் கட்டைகள் போன்ற ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர்.

பின்னர் ஒட்டகத்தை மரத்தில் கட்டிவைத்து கொடூரமாக தாக்குதல் நடத்தி, அதன் முகத்தைச் சிதைத்து கொலை செய்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து போலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, "அந்த ஒட்டகம் மனநலம் பாதித்துவிட்டது. அதனால்தான் அதன் உரிமையாளரையே கடித்து கொலை செய்துள்ளது. ஒட்டகம் யாரையாவது மீண்டும் கடித்து கொலை செய்ய வாய்ப்புள்ளது என்ற பயத்தால் அதை நாங்கள் அடித்துக் கொன்றோம்" என பொதுமக்கள் போலிஸாரிடம் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உரிமையாளரை ஒட்டகம் கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மேளதாளத்துடன் கிளிகளுக்கு திருமணம்.. பாசமாக வளர்த்த கிளியை மாமியார் வீட்டிற்கு அனுப்பிவைத்த உரிமையாளர்!