India
"சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்லும் ஒன்றிய அரசு": மக்களவையில் அனல் பறக்க பேசிய கனிமொழி MP!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றிக் கூட்டத் தொடரைத் தொடங்கி வைத்தார். இதையடுத்து 2022 -23ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்தில் 2023 -24ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதையடுத்து இன்று குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களவையில் பேசிய தி.மு.க உறுப்பினர் கனிமொழி, "ஒரே நாடு, ஒரு ரேஷன் கார்டு தொடங்கி ஒரே கட்சி என்ற திட்டத்தைக் கொண்டுவர பா.ஜ.க நினைக்கிறது. அந்த திட்டம் ஒருபோதும் பலிக்காது.
தமிழகம், கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுக்கு எதிராகச் செயல்படுகின்றனர். தமிழ்நாட்டில் தேர்தல் ஏதும் இல்லை என்பதால் குடியரசு தலைவர் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்ட ஒன்றிய அரசு மறந்துவிட்டது.
தமிழ்நாட்டில் ஆளுநர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கின்றனர். ஆளுநர்களுக்கு அரசியல் சாசனத்தையும், கூட்டாட்சி முறையையும் கற்பிக்க வேண்டும்.
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. சுமார் 4 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி இருக்கின்றனர். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை.
ஒன்றிய அரசு சர்வாதிகார திட்டத்தை நோக்கிப் பயணிக்கிறது. நாடாளுமன்றத்தை மதிக்காமல், ஆலோசனை நடத்தாமல், கருத்தைக் கேட்காமல் தன்னிச்சையாகச் செயல்படுகிறது. சமஸ்கிருதத்திற்கு ரூ.198.98 கோடி நிதி ஒதுக்கிய நிலையில் , தமிழுக்கு ரூ.11.86 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.4 ஆண்டுகளுக்கு முன் மதுரை எய்ம்ஸ்-க்கு மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் இன்று வரை பணிகள் தொடங்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதியை எப்போது விடுவிப்பீர்கள்? கேள்விகளை அடுக்கிய தி.மு.க எம்.பிக்கள்!
-
“வரலாற்றில் இடம்பிடித்த சிலை…மார்க்ஸை வடிவமைக்கும் போது பூரித்தேன்” : நெகிழ்ந்த சிற்பி கார்த்திகேயன்!
-
U19 உலகக்கோப்பை: சூர்ய வம்சியின் அதிரடி ஆட்டம்! இங்கிலாந்திற்கு 411 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயம்!
-
6 புதிய சமத்துவபுரங்கள்: சாலை, பாலங்கள்- புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.348.59 கோடி செலவில் அரசு மருத்துவமனை கட்டடங்கள்: மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் முதலமைச்சர்!