India

துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்.. சோகத்தில் முடிந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சி: நடந்தது என்ன?

வட மாநிலங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டு தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்துவது வழக்கம். இப்படியான கொண்டாட்டங்கள் திருமண நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது அரசியல் நிகழ்ச்சிகளிலும் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரங்களின் போதும், வெற்றி அறிவிப்பின் போதும் இப்படி துப்பாக்கியால் சுட்டு கொண்டாடுகின்றனர்.

சில நேரங்களில் இந்த கொண்டாட்டம் விபரீதத்தில் முடிந்து விடுகிறது. அப்படிதான் உத்தர பிரதேசத்தில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியின் போது துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடும் போது தவறுதலாக வாலிபர் ஒருவர் மீது குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், புலந்த்சாகர் மாவட்டத்திற்குட்பட்ட பிபிநகரில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது இதில் பங்கேற்ற விஷால் என்ற நபர் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென தவறுதலாகக் குண்டு ஒன்று அங்கு நின்று கொண்டிருந்த சரத் மற்றும் ராஜ்குமார் ஆகிய இரண்டு பேர் மீது பாய்ந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனே இருவரையும் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த சரத் என்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து சரத் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த விஷாலை கைது செய்துள்ளனர்.

Also Read: அப்போ ரயில் எஞ்சின்.. இப்போது தண்டவாளம்: பயன்படாத ரயில் நிலையங்களை குறிவைத்துத் திருடும் கும்பல்!