India

58 வயது பெண்ணை கடத்திய சிறுவன்.. பின்னணியில் பகீர்.. மத்திய பிரதேசத்தை உலுக்கிய சம்பவம் !

மத்திய பிரதேசம் மாநிலம், ரேவா மாவட்டத்தில் உள்ளது கைலாஷ்புரி என்ற கிராமம். இங்கு 58 வயதுடைய பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவரது கணவர் அந்த பகுதியில் வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த பெண் வீட்டுக்கு அருகே 16 வயது சிறுவனும் தங்கி இருந்துள்ளார். அவரது வீட்டில் டிவி இல்லை என்பதால், இந்த பெண் வீட்டிற்கு வந்து டிவி பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அப்போது ஒருநாள் பெண்ணின் வீட்டிலுள்ள செல்போன் காணாமல் போயுள்ளது. வீடு முழுக்க தேடியும் அது காணவில்லை என்பதால், சிறுவனிடம் கேட்டுள்ளார்.

அதற்கு சிறுவனோ, தான் திருடவில்லை என்று கூறி மறுத்துள்ளார். இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்ளாத பெண், அந்த சிறுவனை அடித்து வசைபாடியுள்ளார். மேலும் இனி இந்த பக்கம் வரவே கூடாது என்று கூறி திட்டியுள்ளார். இதனால் சிறுவன் அந்த வீட்டு பக்கம் செல்வதை நிறுத்தியுள்ளார்.

ஆனால் அது கிராமம் என்பதால், ஒரு இடத்தில் நடந்த சம்பவம் ஊருக்கே எளிதில் தெரிந்துவிடும். இதனால் சிறுவன் திருடியதாக அக்கம் பக்கத்தினர் அவரை கேலி செய்துள்ளார். மேலும் தொடர்ந்து அவரை கிண்டல் செய்து வசைபாடியும் வந்துள்ளனர். எங்கு சென்றாலும் அதுவே தொடர்ந்து வந்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த சிறுவன், அந்த பெண்ணை பழி வாங்க வேண்டும் என்று எண்ணியுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று இரவு நேரத்தில் பெண்ணின் வீட்டில் யாரும் இல்லை. இதனை அறிந்த சிறுவன், பெண் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை தாக்கியுள்ளார். மேலும் அவரது கை கால்களை கட்டிப்போட்டு அந்த பகுதி அருகே இருக்கும் புது கட்டட கட்டி வரும் இடத்திற்கு கடத்தி சென்றுள்ளார். பின்னர் அங்கே அந்த பெண்ணுக்கு மயக்கம் தெளிந்த பின்னர், அவரை கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பெண், சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதையடுத்து அந்த சிறுவன், பெண்ணை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார். மேலும் அவரது நகைகளை எடுத்துக்கொண்டு பெண்ணின் உடலை நிர்வாண கோலத்தில் அங்கேயே போட்டுவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.

மறுநாள் இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்கையில், அந்த பகுதியை சேர்ந்த சிறுவன் காணாமல் போயுள்ளது தெரியவந்தது. பின்னர் அவரது போட்டோவை பெண் குடும்பத்தாரிடம் காண்பித்து விசாரிக்கையில், பக்கத்து வீட்டு பையன் என்று தெரியவந்தது.

இதையடுத்து விசாரணை துரிதப்படுத்தியபோது அந்த சிறுவன் ஒரு இடத்தில் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரை சுற்றி வளைத்து காவல்துறையினர் விசாரித்தபோது அவரை கொலை செய்தது தான்தான் என்று நடந்தவற்றை எல்லாம் ஒப்புக்கொண்டுள்ளார். இதைதொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறுவன் சிறையில் அடைக்கப்பட்டார்.

58 வயது பெண்ணை பழி வாங்க எண்ணிய சிறுவன், அவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மொட்டைமாடியில் காதலியுடன் ரகசிய சந்திப்பு.. தாய் வந்ததால் தப்பிக்க முயன்ற காதலனுக்கு நேர்ந்த சோகம் !