India

82 நாடுகளில் கைதிகளாக இருக்கும் 8343 இந்தியர்கள்: நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு சொன்ன அதிர்ச்சி தகவல்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றி கூட்டத் தொடரைத் தொடங்கி வைத்தார். இதையடுத்து 2022 -23ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் நாடாளுமன்றத்தில் 2023 -24ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு இரண்டரை லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 7 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருவாய் உள்ளவர்கள் வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்றும் ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் அதானி விவகாரம், பிபிசி ஆவணப்படம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருவதால் தொடர்ந்து இரண்டு நாட்களாக இதன் மீது விவாதம் நடத்தாமல் ஒன்றிய அரசு கூட்டத் தொடரை ஒத்திவைத்து வருகிறது.

இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, வெளிநாட்டுச் சிறைகளில் 8,343 இந்தியர்கள் கைதிகளாக உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சிறைகளில் உள்ள இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்பாகவும், அவர்களை விடுதலை செய்து இந்தியா அழைத்து வருவதற்குத் தேவையான நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுத்துள்ளதா? என எழுத்துப்பூர்வமாகக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்துள்ள ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன், "ஒன்றிய அமைச்சகத்திடம் உள்ள தகவல்களின்படி 82 நாடுகளில் 8,343 இந்தியர்கள் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகபட்சமாக ஐக்கிய அரபு அமிரகத்தில் 1,926 பேரும்,, சவுதி அரேபியாவில் 1,362 பேரும் , நேபாளத்தில்1,222 இந்தியர்கள் கைதிகளாகவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியர்களை வெளிநாட்டுச் சிறைகளிலிருந்து விடுவிக்கக் கூடிய முயற்சியாக ஆஸ்திரேலியா, பக்ரைன், பங்களாதேஷ், பிரான்ஸ், இஸ்ரேல், ரஷ்யா, சவுதி அரேபியா மற்றும் இலங்கை உள்ளிட்ட 31 நாடுகளிடம் இந்தியா சிறை கைதிகளை மாற்றம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

Also Read: SEBI,RBI-யின் முக்கிய பொறுப்பில் அதானி மகனின் மாமனார்.. முறைகேடுகளுக்கு துணையா?வெளிவந்த அதிர்ச்சி தகவல்!