India

நடுரோட்டில் கவிழ்ந்த கான்கிரீட் லாரி.. அப்பளம் போல் நொறுங்கிய கார்: தாய் - மகளுக்கு நடந்த துயரம்!

பெங்களூருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் சுனில் குமார். இவரது மனைவி காயத்ரி குமார். இவர் தகவல் தொழில்நுட்ப துறையில் வல்லுநராக உள்ளார். இந்த தம்பதிக்கு 16 வயதில் சமந்தா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் இன்று காலை மகளை காய்த்ரி குமார் காரில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பன்னர்கட்டா சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த கான்கிரீட் கலவை வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகே வந்து கொண்டிருந்த காய்த்ரி குமார் கார் மீது கவிழ்ந்தது.

இந்த விபத்தில் கார் முழுவதும் கான்கிரீட் லாரியின் கீழ் அப்பளம்போல் நொறுங்கியது. அந்த கொடூர விபத்தைப் பார்த்த பொதுமக்கள் காரில் சிக்கியவர்களை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. பின்னர் இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் கான்கிரீட் கலவை வாகனத்தை அகற்ற முயன்றும் முடியவில்லை.

பின்னர் கிரேன் வாகனங்களை கொண்டுவந்து கான்கீரிட் கலவை வாகனத்தை அகற்றினர். பிறகு காரில் சடலமாக இருந்த காயத்திரி குமார் மற்றும் அவரது மகள் சமந்தாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்ற கான்கிரீட் கலவை வாகனத்தின் ஓட்டுநரை போலிஸார் தேடி வருகின்றனர். லாரி ஓட்டுநரின் அஜாக்கிரதையின் காரணமாகப் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த மாணவி தாயுடன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: உலகை உலுக்கிய கொலை.. இறந்ததாக நாடகமாடிய மாடல் அழகி: 6 மாதத்திற்குப் பிறகு வெளிவந்த பகீர் உண்மை?