India

UNION BUDGET 2023: “இதெல்லாம் ஒரு பட்ஜெட்டா? மளிகை கடை பில் போல இருக்கு..”-பாஜக சுப்பிரமணியன் சாமி ஆவேசம்

இந்தியாவில் ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தில் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் தாக்கல் செய்வார். அதன்படி இந்தாண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றித் தொடங்கி வைத்தார். இதையடுத்து கடந்த 2022 -23ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து இன்று நாடாளுமன்றத்தில் 2023 -24ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் பா.ஜ.க அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். மேலும் ஐந்தாவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.

இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி சில பட்ஜெட் நல்லவையாக வெளியே காணப்பட்டாலும் பலவை குறைகளாகவே உள்ளது.

சிகரெட் மீதான வரி 16% உயர்த்தப்பட்டுள்ளது. கலப்பு ரப்பர் மீதான அடிப்படை இறக்குமதி வரி 10% இருந்து 25% ஆக அதிகரிப்பு. சமையலறை மின்சார புகைபோக்கிக்கான சுங்க வரி 7.5 % இருந்து 15% ஆக அதிகரித்துள்ளது.மேலும், தங்கக் கட்டிகள், வெள்ளிக் கவசங்கள், பிளாட்டினம் ஆகியவற்றால் செய்யப்பட்ட பொருட்களுக்கு அடிப்படை சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற மக்களுக்கு நன்மை அளிக்காத பட்ஜெட்டே இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் பலரும் விமர்சித்து வருவது ஒரு புறம் இருக்க, மறுபுறம் பாஜகவை சேர்ந்தவர்களே விமர்சித்து வருகின்றனர்.

அதாவது பாஜக முன்னாள் எம்.பியான சுப்பிரமணியன் சுவாமி இந்தாண்டு வெளியிட்ட பட்ஜெட் குறித்து கடுமையான விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இது இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டா? இது ஒரு மளிகை கடை கடைக்காரரின் பில் - ஒரு நேர்மையான பட்ஜெட் குறிக்கோள்கள் என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும். இது GDP வளர்ச்சி விகிதம் என்றால் முதலீட்டின் நிலை மற்றும் வருவாய் விகிதத்தை வெளிப்படுத்தவும்." என்று விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , "ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் வருமானவரி மாற்றங்கள் ஒருசாராருக்கு மட்டுமே பலனளிக்கும் வகையில் இருக்கிறது. ஏழை, எளிய, விளிம்பு நிலையில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்தவொரு நம்பிக்கையும் அளிக்காத பட்ஜெட்" என விமர்சித்துள்ளார்.

Also Read: எதிர்கட்சியிலிருந்து சொந்த கட்சி வரை.. ஒன்றிய பட்ஜெட்டை கிழித்து தள்ளும் அரசியல் தலைவர்கள் !