India

நாட்டை உலுக்கிய அமைச்சர் கொலை வழக்கு : கைது செய்யப்பட்ட போலிஸுக்கு அம்பி - அந்நியன் குணமாம் !

ஒடிசா மாநிலத்தில் தற்போது நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அனைத்து மாநிலங்களில் நிலவும் அதே அரசியல் மோதல்கள் அடிக்கடி காணப்படும். இங்கு சுகாதாரத் துறை அமைச்சர் இருப்பவர் நபா தாஸ்.

இந்த நிலையில் ஒடிசாவின் ஜர்சுகுடா பகுதியிலும் பிரஜாராஜ் நகரில் குறைதீர்ப்பு அலுவலக திறப்பு விழா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நபா தாஸ் சிறப்பு விருந்தினாக கலந்துகொள்ள சென்றார். அப்போது அவர் தனது காரின் கதவை திறந்து உள்ளே செல்ல முயன்றபோது அருகிலிருந்த நபர் ஒருவர் அவரை துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டார்.

இதில் சுருண்டு விழுந்த அமைச்சரை சக அதிகாரிகள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, மேலும் 2 அதிகாரிகள் மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. தொடர்ந்து அமைச்சரை சுட்டது யார் என்று விசாரிக்கையில் காவல் உதவி ஆய்வாளர் கோபால் தாஸ் என்பவர் சுட்டது தெரியவந்தது. உடனே அவரை தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர், மேல் சிகிச்சைக்காக புவனேஸ்வர் அப்பலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றைய முன்தினம் இரவு உயிரிழந்தார்.

பொது இடத்திலேயே ஒரு காவல் அதிகாரி அமைச்சரை சுட்டு கொன்றுள்ள சம்பவம் ஒடிசா அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் கைது செய்யப்பட்ட அதிகாரியை தீவிரமாக விசாரித்து வந்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க ஒடிசா மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க டிஎஸ்பி ரமேஷ் சி டோரா தலைமையிலான 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

விசாரணையில் கைது செய்யப்பட்ட கோபால் தாஸ் ஒடிசா மாநிலதத்திலுள்ள கஞ்சம் என்ற பகுதியை சேர்ந்தவர் என்றும், ஆரம்பத்தில் கான்ஸ்டேபிளாக தனது பணியை தொடங்கிய இவர், படிப்படியாக பதவி உயர்வு பெற்று உதவி காவல் ஆய்வாளராக உயர்ந்து இருபத்தும் தெரியவந்தது. சமீபத்தில்தான் அவருக்கு உதவி காவல் ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

அவருக்கு இருவேறு நபர்களாக நடந்துகொள்ளும் பைபோலார் என்ற மனநல பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 8 ஆண்டுகளாக கோபால் தாஸ் மனநல பிரச்னைக்காக மருந்துகளை எடுத்து வந்ததாகவும், கடந்த 4-5 மாதங்களுக்கு அவர் வீட்டுக்கு வந்தபோது நல்ல நிலையில் இருந்ததாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

மேலும் கோபால் தாஸ், அவரது உறவினர் ஒருவருக்கு வேலை கேட்டு சுகாதாதாரத் துறை அமைச்சர் நபா தாஸை மூன்று மாதங்களுக்கு முன்பு சந்தித்துள்ளதாகவும், ஆனால் வேலை வாங்கித் தராததால் அமைச்சரை கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் அவர் அமைச்சரை கொலை செய்ய உண்மையான காரணம் வெளியாகவில்லை.

Also Read: மின்சார ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி.. காதலியை அடுத்து காதலனும் உயிரிழப்பு: போலிஸ் விசாரணை!