India

சீடருக்கு தொடர் பாலியல் தொல்லை.. 10 ஆண்டுகளுக்கு பிறகு குஜராத் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை !

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் ஆசாராம் பாபு. இவர் அந்த பகுதியில் சாமியாராக கருதப்படுகிறார். மேலும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், அகமதாபாத் உள்ளிட்ட பல இடங்களில் சொந்தமாக ஆசிரமங்களும் நடத்தி வருகிறார். நாளடைவில் சில அறக்கட்டளையை உருவாக்கி அதனையும் நடத்தி வருகிறார்.

இவரது ஆசிரமத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவர். அதோடு இவரது ஆசிரமங்களில் பெண் சீடர்களே அதிகமாக இருப்பர். அந்த பெண் சீடர்களுக்கு இவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து பெண் சீடர்கள் சிலர் குற்றச்சாட்டுகாளி முன்வைத்தனர். மேலும் 16 வயது சிறுமி ஒருவரையும் இவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்கள் கொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவருக்கு 2018-ல் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் தற்போது ஜோத்பூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இதனிடையே அவர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்தார்.

அதாவது குஜராத்தின் அகமதாபாத்தில் இருக்கும் இவரது ஆசிரமத்தில் சூரத்தைச் சேர்ந்த பெண் சீடர் ஒருவர் இருந்துள்ளார். அப்போது 2001 முதல் 2006 வரை அந்த பெண்ணுக்கு இந்த சாமியார் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதன்காரணமாக பாதிக்கப்பட்ட அந்த பெண் கடந்த 2013-ம் ஆண்டு புகார் அளித்திருந்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட அந்த பெண், சாமியார் மீது மட்டுமின்றி, ஆசாராம் பாபுவின் மனைவி லட்சுமி, மகன் நாராயண் சாய், சாமியாரின் சீடர்கள் என கூறிக்கொண்ட 4 பெண்கள் உட்பட 7 பேர் மீது புகார் கொடுத்தார். இது தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது இதற்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த வழக்கில் ஆஜராகி வந்த சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர்.சி.கோடேகர் கூறுகையில், "இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376 (சி) (பலாத்காரம்), 377 (இயற்கைக்கு மாறான பாலியல் குற்றங்கள்) மற்றும் பிற விதிகளின் கீழ் பாதிக்கப்பட்ட பெண்ணை சட்டவிரோதமாக காவலில் வைத்ததாக சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபணமானதால் ஆசாராம் குற்றவாளி என்று அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் இந்த வழக்கில் இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி ஆசராமின் மனைவி உட்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆசாராமின் வழக்கறிஞர் சிபி குப்தா கூறுகையில், "இது 2001 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் என்று கூறப்பட்டாலும் 2013இல் தான் புகார் தாக்கல் செய்யப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்" என்றார்.

Also Read: 72.48 கோடி ரூபாய் போனஸ்.. 30 % சம்பள உயர்வு... பணத்தை மலை போல குவித்து ஊழியர்களை அதிரவைத்த சீன நிறுவனம்!