India

12 மாநிலம், 4080 கிலோ மீட்டர்: கொட்டும் பனியில் நிறைவடைந்த ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம்!

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார். அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப் பயணத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை வழங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மாகராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, பஞ்சாப் என 12 மாநிலங்களைக் கடந்து ஜனவரி 20ம் தேதி ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்தது.

பின்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் 10 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார். இந்த நடைபயணம் துவங்குவதற்கு முன்பு சொன்னபடி எந்த தடைகள் வந்தாலும் பயணம் தொடருவேன் என உறுதியாக ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இதன் படி இன்று ஒன்றிய அரசு உரியப் பாதுகாப்பை நடைபயணத்திற்கு கொடுக்கவில்லை என்றாலும் தனது பயணத்தை இன்று ஸ்ரீநகரில் வெற்றிகரமாக முடித்துள்ளார் .

ஒவ்வொரு மாநிலத்திலும் ராகுல் காந்தி சென்றபோது பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதோடு, ராகுல் காந்திக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து அவரது நடைபயணத்தில் பங்கேற்றனர். மேலும் மாநிலத்திலும் நடந்த பொதுக்கூட்டங்களில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத திட்டங்களை மக்கள் மத்தியில் வெளிச்சம்போட்டு காட்டினார்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் இன்று ஸ்ரீநகரில் நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். திமுக சார்பில் திருச்சி சிவா எம்.பி., ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "நான் இந்த யாத்திரையை எனக்காகவோ அல்லது காங்கிரஸுக்காகவோ செய்யவில்லை. நாட்டு மக்களுக்காக மேற்கொண்டேன். இந்த நாட்டின் அடித்தளத்தை அழிக்க நினைக்கும் சித்தாந்தத்திற்கு எதிராக நிற்பதே இந்த நடைபயணத்தின் நோக்கம். " என்று தெரிவித்துள்ளார்.

Also Read: அணிதான் முக்கியம்.. சூரியகுமாருக்காக தனது விக்கெட்டை தியாகம் செய்த வாஷிங்டன் சுந்தர்..ரசிகர்கள் பாராட்டு!