India

மும்பை : காதலனோடு இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை.. புகைப்படம் எடுக்கசென்ற இடத்தில் நடந்த சோகம் !

மஹாராஸ்டிர மாநிலம் மும்பையிலுள்ள கல்யாண் மற்றும் தாகுர்லி இடையிலான ஆட்கள் நடமாட்டம் இல்லாத கழிமுகப்பகுதியில் 17 வயது சிறுமி ஒருவரும் அவரின் காதலனும் அமர்ந்து கடலை பார்த்தபடி வீடியோ, புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதிக்கு இரண்டு பேர் வந்து தங்களை போலிஸார் என்று கூறி கொண்டு இந்த இடத்துக்கு தனியாக ஏன் வந்தீர்கள் எனக் கூறி மிரட்டியுள்ளனர். மேலும் அந்த இளைஞரை விசாரிக்க வேண்டும் என்று கூறி, அவரை ஒருவர் தனியாக அழைத்துச்சென்ற நிலையில் மற்றொருவர் அந்த சிறுமியை வேறு இடத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

அதன்பின்னர் அந்த சிறுமியிடம் காதலனுக்கு போன் செய்து, தான் சம்பவ இடத்திலிருந்து தப்பித்துவிட்டதாகவும், தன்னுடை பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று கூறும்படியும் மிரட்ட அதன்படி சிறுமியும் கூறியுள்ளார். அதன்பின்னர் அந்த நபர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சிறுமியின் காதலரை அழைத்துச்சென்ற மற்றொரு நபர் அவரை அடித்து ரயிலில் ஏற்றி அந்த சிறுமி இருந்த இடத்துக்கு வந்துள்ளார். வந்தவர் அந்த சிறுமியை ரயில் நிலையத்தில் விட்டுவிடுவதாக கூறி அவரும் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் ரயில் நிலையத்தில் சிறுமியை விட்டுள்ளார்.

தனக்கு நடந்த இந்த கொடுமை குறித்து அந்த சிறுமி ரயில் நிலையத்தில் இருந்த காவல்துறையினரிடம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார் சிறுமியை அவரின் வீட்டுக்கு அழைத்து சென்று பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் சிறுமி கூறிய தகவலின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலிஸார் குற்றவாளிகளை தேடினர்.

அதன்படி சம்பவம் நடந்த 30 மணி நேரத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பண்டேகர் என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும், அவர் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் வேறு பெண்கள் யாரும் இப்படி சிக்கியுள்ளனரா என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: சரிந்து கொண்டிருக்கும் அதானியின் நிறுவனத்தில் மீண்டும் ரூ.300 கோடி முதலீடு.. பலிக்கடாவாக்கப்படுகிறதா LIC?