India

வயிற்றுக்குள் பேண்டேஜ்.. வயிறு வலி என மருத்துவமனைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..உ.பியில் அதிர்ச்சி!

உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா என்ற பகுதியை சேர்ந்தவர் மகேந்திர சைனி. இவருக்கும் ராதா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ராதா கடந்த சில நாட்களாகவே வயிறு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். எனவே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கே இவரை பரிசோதித்த மருத்துவர்கள், இவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். எனவே இவரும் அறுவை சிகிச்சைக்கு தயாராகியுள்ளார்.

இதையடுத்து அவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த பிறகும் அவருக்கு வயிறு வலி தொடர்ச்சியாக இருந்துள்ளது. சிறிது நாட்களில் சரியாகி விடும் என்று எண்ணிய போதிலும், அவருக்கு தொடர்ச்சியாக வலி இருந்துள்ளது.

இதனால் அதே மருத்துவமனையை மீண்டும் அணுகியுள்ளார். அங்கே அவரது வலிக்கு தீர்வு கிடைக்கவில்லை என்பதால், வேறொரு தனியார் மருத்துவமனையை அணுகியுள்ளார். அங்கே அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, அவரது வயிற்றுக்குள் பேண்டேஜ் இருந்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அந்த பேண்டேஜ் அகற்றப்பட்டது.

இருந்தபோதிலும் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகி இறுதியில் பரிதாபமாக உயிரிழந்தார். ராதா உயிரிழந்ததையடுத்து ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தார், மற்றும் அந்த பகுதி வாசிகள், முதலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து இதுகுறித்து காவல்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வயிறு வலி என்று போன பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், அவரது வயிற்றுக்குள் பேண்டேஜ் வைத்து தைத்துள்ளதால் பெண் உயிரிழந்துள்ள அந்த பகுதியில் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: காதலிக்க மறுத்த சிறுமி.. பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி கொலை செய்த சக மாணவன்.. மோடிநகரில் அதிர்ச்சி !