India

காதலிக்க மறுத்த சிறுமி.. பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி கொலை செய்த சக மாணவன்.. மோடிநகரில் அதிர்ச்சி !

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள மோடி நகரில் பள்ளிக்கு சென்ற 12 வயது சிறுமி காணாமல் போனதாக அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் அந்த சிறுமியை தேடி வந்தனர்.

அப்போது பள்ளிக்கு அருகில் இருந்த காட்டில் சிறுமி ஒருவரின் சடலம் இருப்பது போலிஸாருக்கு தெரியவந்துள்ளது. அங்கு சென்று சோதனை செய்ததில் ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன சிறுமி சடலமாக கிடந்தார். அவரின் தலையில் கல்லால் அடிக்கப்பட்டு கொலை செய்த தடயமும் இருந்துள்ளது.

தொடர்ந்து போலிஸார் சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் அவரின் நண்பர்களிடம் இது குறித்து விசாரணை நடத்திவந்தனர். அப்போது சிறுமியின் பள்ளி தோழிகள் சிறுமியை அதே பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் காதலிக்க சொல்லி அடிக்கடி வற்புறுத்தி வந்ததாக கூறியுள்ளனர். இதனால் போலிஸார் அந்த மாணவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

ஆனால், அந்த சிறுமியின் மரணம் குறித்து தனக்கு ஏதும் தெரியாது சம்பவத்தன்று தான் வீட்டில் இருந்ததாகவும் கூறியுள்ளார். அதன்பின்னர் போலிஸார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியபோது அந்த மாணவர் மாணவி காணாமல் போனதற்கு பின்னர் பள்ளிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. இதனால் போலிஸாரின் சந்தேகம் அந்த மாணவர் மீது திரும்பியுள்ளது.

தொடர்ந்து அந்த மாணவரிடம் போலிஸார் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்கு பின் முரணாக கூறியுள்ளார். இதனால் போலிஸார் அந்த மாணவி இன்னும் உயிரோடு இருப்பதாகவும், அவரிடம் வாக்குமூலம் பெறும்முன் உண்மையில் ஒப்புக்கொண்டால் தண்டனை குறையும் என்றும் கூற அந்த மாணவியை தான் கொலை செய்ததை அந்த மாணவர் இறுதியில் ஒப்புக்கொண்டுள்ளார்.

சிறுமி காதலிக்க ஒப்புக்கொள்ளாததால் அவரை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும், அதற்கு சிறுமி எதிர்ப்பு காட்டியதால் அவரை கல்லால் அடித்து கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த சிறுவனை கைது செய்த போலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவரை சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அதிர்ச்சி சம்பவம்.. ஓடும் ரயிலில் 2 வயது மகன் கண்முன்னே தாயை பாலியல் வன்கொடுமை செய்த டிக்கெட் பரிசோதகர்