India

ஒரே ஒரு மாணவனுக்காக இயங்கும் பள்ளி.. 2 ஆண்டுகளாக பாடம் எடுக்கும் ஒரே ஒரு ஆசிரியர்.. எங்கு தெரியுமா ?

“கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே..” என்று சொல்வது போல், தற்போதுள்ள காலகட்டத்தில் படிப்பு அத்தியாவசியமாகியுள்ளது. படிப்புதான் நம்மிடம் இருந்து திருட முடியாத செல்வம் என்ற வார்த்தைக்கு ஏற்ப பலரும் படிப்பதில் முனைப்பு காட்டி வருகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிராவில் ஒரு அரசுப் பள்ளியில் பயிலும் ஒரே ஒரு மாணவனுக்கு ஒரே ஒரு ஆசிரியர் வகுப்பு எடுத்து வருகிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் என்ற பகுதியில் அமைந்துள்ளது கணேசபுரம் என்ற கிராமம். இங்கு 1 முதல் 4-ம் வகுப்பு வரை இயங்கக்கூடிய அரசு ஆரம்ப பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. வெறும் 150 மட்டுமே மக்கள் தொகை கொண்ட அந்த கிராமத்தில் இருக்கும் கார்த்திக் என்ற ஒரு மாணவன் கல்வியில் ஆர்வம் மிகுந்தவராக காணப்படுகிறார்.

எனவே அந்த ஆரம்ப பள்ளியில், இந்த மாணவன் மட்டுமே படித்தும் வருகிறார். அந்த ஒரு மாணவனுக்கு அரசு சார்பில் அரசு பள்ளிக்கு கிடைக்க கூடிய மதிய உணவு திட்டம் உட்பட அனைத்து வாசிகளும் கிடைக்கிறது. தனது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் இந்த மாணவன், தன்னுடன் படிப்பதற்கு சக மாணவர்கள் யாரும் இல்லை என்று கவலை கொண்டதில்லை.

பொதுவாக 50 மாணவர்கள் இருந்தாலே ஆசிரியர்கள் ஒழுங்காக வகுப்பிற்கு வரமாட்டார் என்றும், பாடம் நடத்த மாட்டார் என்றும் பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், இங்கு ஒரு ஆசிரியர், இந்த ஒரு மாணவருக்காக மட்டும் வந்து வகுப்பு எடுக்கிறார்.

கிஷோர் மன்கர் என்ற பெயர் கொண்ட அந்த ஆசிரியர் சுமார் 10 - 12 கி.மீ., தொலைவில் இருந்து இந்த பள்ளிக்கு வந்து இந்த மாணவனுக்கு அனைத்து பாடங்களையும் கற்றுக்கொடுத்து வருகிறார். இது குறித்து ஆசிரியர் கிஷோர் கூறுகையில், “150 பேர் மக்கள் தொகை கொண்ட இந்த கிராமத்தில் இந்த பள்ளியில் படிக்க கூடிய வயதில் ஒரு மாணவன் மட்டுமே உள்ளார்.

அவருக்கும் நான் 10 - 12 கி.மீ., தொலைவில் இருந்து வந்து 2 ஆண்டுகளாக பாடம் எடுக்கிறேன். இந்த மாணவனுக்கு அரசு சலுகையும் கிடைக்கிறது.” என்றார்.

Also Read: "காந்தி சொன்னதைபோல் ஆளுநர் மாளிகைகளை மருத்துவமனைகளாக பயன்படுத்தலாம்": வைகோ கோரிக்கை!