India

நடனமாட மறுத்த 10 வயது சிறுமி.. ஆத்திரத்தில் உயிரோடு எரித்த கொடூரர்கள்.. பீகாரை உலுக்கிய சம்பவம் !

பீகார் மாநிலம் வைஷாலி பகுதியிலுள்ள பாகூரா என்ற கிராமத்தில் கடந்த புதன்கிழமை திருமணம் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அப்போது அங்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.

அப்போது அதே கிராமத்தவை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர், அவரது நண்பர்களுடன் அந்த திருமண நிகழ்வுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு இவர்கள் நடனமாடியுள்ளனர். அந்த சமயத்தில் 18 வயதான பிரசாந்த் குமார், 20 வயதான பிரதீக் குமார் ஆகிய 2 இளைஞர்களும் தங்களுடன் சேர்ந்து நடனமாடும்படி இவர்களை அழைத்துள்ளனர்.

அப்போது இந்த சிறுமியும், அவரது நண்பர்களும் மறுப்பு தெரிவித்துள்னர். தொடர்ந்து வற்புறுத்தி அழைத்த போதும் அவர்கள், இந்த இளைஞர்களுடன் நடனமாட மறுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த இருவரும் அந்த சிறுமிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனை மனதில் வைத்து கொண்டு பழி வாங்க வேண்டும் என்று எண்ணியுள்ளனர். அந்த இளைஞர்கள். தொடர்ந்து அடுத்த நாள் (வியாழக்கிழமை) அந்த சிறுமி இயற்கை உபாதை கழிக்க, திருமண மண்டபத்தில் இருக்கும் கழிவறை நோக்கி சென்றுள்ளார்.

அப்போது அவர் அருகே யாருமில்லை என்பதை உணர்ந்த அந்த இளைஞர்கள் சிறுமியின் வாயை மூடி, அவரை தூக்கி சென்றுள்ளனர். பின்னர் மண்டபத்திற்கு சிறிது தூரத்தில் இருக்கும் ஒரு வயல்வெளி அருகே தூக்கி சென்ற இளைஞர்கள் அந்த சிறுமி மீது பெட்ரோலை ஊற்றியுள்ளனர். பின்னர் அவர் மீது நெருப்பை பற்ற வைத்து உயிரோடு எரித்துவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பியோடியுள்ளனர்.

தொடர்ந்து சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த உறவினர்கள், அவரை மீட்டு ஹாஜிபூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் படுகாயமடைந்த அந்த சிறுமி தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவர் தற்போது வரை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பின்னர் இதுகுறித்து காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடி தலைமறைவாக இருக்கும் அந்த இரண்டு இளைஞர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தங்களுடன் நடனமாட மறுத்த 10 வயது சிறுமியை 2 இளைஞர்கள் உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ள சம்பவம் பீகாரில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வீட்டுக்கு வர மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் தனக்கு தானே கணவர் செய்த கொடூரம்.. பீகாரில் அதிர்வலை !