India

“வழுக்கையுடன் இருப்பவர்களுக்கு ரூ.6000 ஓய்வூதியம் வேண்டும்..” - புதிதாக சங்கம் உருவாக்கி கோரிக்கை !

ஒட்டுமொத்த உலகத்திலும் ஆண்கள் பெருவாரியான கஷ்டத்தை அனுபவிக்கும் ஒரு விஷயம் தான் முடி கொட்டுதல், இதன்மூலம் அவர்களுக்கு வழுக்கை ஏற்படும். வயதானால் கூட பெரிதாக தெரியாது; ஆனால் சிலருக்கு இளம் வயதிலே முடிகொட்டும் பிரச்னை ஏற்பட்டு வழுக்கை விழுவது உண்டு.

இதனால் ஆண்கள் சிலர் மன ரீதியான கஷ்டத்தை அன்பவித்து வருகின்றனர். இதற்காக மெடிக்கல் ட்ரீட்மெண்ட் இருப்பினும் பலரால் அதனை கையாள முடியாது. எனினும் ட்ரீட்மெண்ட் செய்த பிறகும் பலருக்கும் இந்த பிரச்னை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் இதற்கு ஒரு தற்காலிக தீர்வு வேண்டும் என தெலுங்கானாவில் ஒரு குழுவினர் திட்டம் ஒன்றை தீட்டியுள்ளனர். அதன்படி ஒரு சங்கம் அமைத்து பாதிக்கப்பட்ட வழுக்கை தலையோடு இருப்பவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை வைத்துள்ளனர்.

அதாவது தெலுங்கானா மாநிலம், சித்திபேட் மாவட்டத்தில் உள்ள தங்கலபள்ளி கிராமத்தில் வழுக்கை தலையுடன் இருக்கும் சில ஆண்கள் சங்கம் ஒன்றை தொடங்கியுள்ளனர். இதற்காக வாக்கெடுப்பு நடத்தி சங்கத்தின் தலைவராக பாலையா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாலையா தலைவராக பொறுப்பேற்றவுடன் தங்களுக்கான கோரிக்கையை பட்டியலிட்டு அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு அனுப்பி வைத்தனர்

அதில் முக்கியமானது வழுக்கையுடன் இருப்பவர்கள் நாள்தோறும் பலரும் கேலி செய்வதால் மன வேதனையுடன் வாழ்வதாகவும், இதனால் தங்களுக்கு ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.6000 வழங்கும்படியும் குறிப்பிட்டுள்ளனர். அதோடு இதனை சங்கராந்தி (தெலங்கானா பொங்கல்) பரிசாக தரும்படி கேட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்த சங்க உறுப்பினர்களில் ஒருவரான பி அஞ்சி என்ற 41 வயது நபர் ஒருவர் கூறுகையில், "நாங்கள் வழுக்கையுடன் இருப்பதால் மக்கள் சிலர் எங்களை கிண்டல் செய்து காயப்படுத்துகின்றனர். அவர்களுக்கு முடி இருப்பதால், அவர்கள் எங்களை குறித்து சிரிக்கிறார்கள். இது எங்களுக்கு மன வேதனையைத் தருகிறது.

நாங்கள் ஏற்கனவே எங்கள் வழுக்கையைப் பற்றி கவலைப்படுகிறோம், நாங்கள் அடிக்கடி கேலி செய்யப்படுகிறோம், இது எங்களுக்கு மற்றொரு கவலையாக இருக்கிறது. இந்த சங்கத்தில் இருக்கும் வெறும் 22 வயது இளைஞர் ஒருவரும் இதே போல்தான் கஷ்டத்தை அனுபவிக்கிறார். அவர் தனது 20 வயதில் முடியை இழந்துள்ளார்" என்றார்.

தொடர்ந்து பேசிய மற்றொருவர், "முடி இல்லாததால் நாங்கள் குடும்பத்துடன் வெளியில் செல்வது கடினமாக இருக்கிறது. எங்களை போல் உள்ளவர்களுக்கு திருமணம் நடப்பதும் கடினமாக இருக்கிறது. மேலும் இதனால் நாங்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகிறோம். ஓய்வூதியம் கிடைத்தால் அதை வைத்து முடிக்கான சிகிச்சையை மேற்கொள்ளவிருக்கிறோம். ஓய்வூதியம் எங்களுக்கு சிகிச்சை செலவாக கருதப்பட வேண்டும்.

முதியவர்கள், கைவிடப்பட்டவர்கள், உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட சிலருக்கு, அரசு ஓய்வூதியம் வழங்கி வருவதுபோல் வழுக்கை தலையுடன் இருப்பவர்களுக்கு மாதந்தோறும் ரூ.6000 வழங்க வேண்டும். எங்களது கோரிக்கையை அரசு பரீசிலிக்க வேண்டும்" என்றார்.

Also Read: “யாரு பெருசுனு அடிச்சு காட்டு..” - பறந்த நாற்காலிகள், உருட்டுக்கட்டை.. கூட்டத்தில் மோதிக்கொண்ட பாஜகவினர்!