India

தொடரும் பாலியல் வன்கொடுமை.. 50 வயது கடந்த பெண்கள் மட்டுமே குறி.. சைக்கோ நபரின் செயலால் உ.பியில் பரபரப்பு!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தில் குஷெட்டி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த டிசம்பர் 5ம் தேதி அன்று வெளியே சென்ற 60 வயது பெண் ஒருவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

பின்னர் தேடுதல் வேட்டையின் போது அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில்,சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு பின்னர் அருகில் உள்ள பாரபங்கி மாவட்டத்தில் வயலுக்கு வேலைக்கு சென்ற 62 வயது பெண் ஒருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.

இந்த இரு கொலைகளையும் செய்தவர் ஒரே நபர்தான் என விசாரணையில் போலிஸார் கண்டுபிடித்தனர். தடயவியல் சோதனையிலும் அது நிரூபிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த கொலையாளியை பல இடங்களில் போலிஸார் தொடர்ந்து தேடி வந்தனர்.

இதனிடையே கடந்த டிசம்பர் 29ஆம் தேதி அதே பகுதில் மலம் கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்ற 50 வயதை கடந்த பெண் ஒருவர் மாயமான நிலையில், காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் அடுத்த நாள் காட்டுப்பகுதியில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.

இது குறித்த விசாரணையில் மேலே இரண்டு சம்பவங்களின் தொடர்புடைய நபர் தான் இதையும் செய்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலிஸார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதே நேரம் 50 வயது கடந்த முதிய பெண்களே குறிவைக்கப்படுவதால் அந்த பகுதியை சுற்றியுள்ள பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அந்த நபர் கைது செய்யப்படுவார் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: கணவரை கால்வாயில் முக்கி கொலை செய்த மனைவி.. வெளியான அதிர்ச்சி காரணம்.. ஆந்திராவில் சோகம் !