India

நீதிமன்றம் படியேறி Flipkart நிறுவனத்திடம் இருந்து ரூ.42,000 இழப்பீடு பெற்ற பெண்: நடந்தது என்ன?

ஃப்ளிப்கார்ட் , அமேசான் போன்ற இ - காமர்ஸ் தளங்கள் அதிகமாக வந்ததை அடுத்து நம்மில் பலரும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்து நமக்குத் தேவையான பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

இப்படி ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது நாம் ஆர்டர் செய்த பொருட்கள் சில நேரம் நமக்குத் தாமதமாகவே கிடைக்கும். மேலும் பணம் செலுத்தியும் அந்த பொருட்கள் கிடைக்காமல் போன சம்பவமும் நடந்திருக்கும். ஆனால் இதை நாம் பெரிது படுத்தாமல் அப்படியே கடந்திருப்போம்.

இந்நிலையில், பணம் செலுத்தியும் ஆர்டர் செய்த செல்போனை டெலிவரி செய்யாத ஃபிளப்கார்ட் நிறுவனத்தை பெண் வாடிக்கையாளர் ஒருவர் ரூ.42 ஆயிரம் அபராதம் செலுத்த வைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்தவர் திவ்யஸ்ரீ. இவர் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி ஃப்ளப்கார்ட் தளத்தில் ரூ.12,499 மதிப்புள்ள செல்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். மேலும் அப்போதே முழு பனத்தையும் அவர் செலுத்தியுள்ளார்.

இதையடுத்து ஆர்டர் செய்த செல்போன் ஜனவரி 16ம் தேதி வந்துவிடும் என அவருக்கு மெசேஜ் வந்துள்ளது. ஆனால் அந்த நாளில் செல்போன் டெலிவரி செய்யப்படவில்லை. இது குறித்து நிறுவனத்தைத் தொடர்பு கொண்டபோதும் அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.

இதனால் ஆவேசமடைந்த அவர் பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம் நாடியுள்ளார். இதையடுத்து இது குறித்து விசாரணை நடத்துவதற்காக நீதிமன்றம் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு நேரில் ஆஜராகி விளக்கம் வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தனது சேவையில் முழு அலட்சியம் காட்டுகிறது என கூறி அந்நிறுவனத்திற்கு ரூ.42 ஆயிரம் அபராதம் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

அதாவது பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு வட்டியுடன் ரூ.12,499 பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டும். மேலும் வாடிக்கையாளருக்கு இழப்பீடாக ரூ.20 ஆயிரமும், வழக்கு செலவிற்காக ரூ.10 ஆயிரமும் செலுத்த வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Also Read: போலி பாலியல் வழக்கு.. மத்திய பிரதேச அரசிடம் 10,000 கோடி நிவாரணம் கேட்டு வழக்கு தொடர்ந்த நபரால் பரபரப்பு !