India

நாட்டை உலுக்கிய இளம்பெண் மரணம்: புத்தாண்டு நள்ளிரவில் 4 கிமீ இழுத்து சென்ற 5 நபர்.. திக் திக் CCTV காட்சி

உலகம் முழுவதும் கடந்த சனிக்கிழமை இரவு புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும் இந்த புத்தாண்டை இரவு முழுவதும் விழித்திருந்து கொண்டாடினர். அந்த வகையில் தலைநகர் டெல்லியிலும் மக்கள் சிலர் குடி, கூத்து என தங்கள் கொண்டாட்டங்களை சிறப்பாக செய்தனர்.

இப்படி இருக்கையில், நேற்று (01.01.2023) அதிகாலை சுமார் 3 மணி அளவில் காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் சாம்பல் நிற பலேனோ கார் ஒன்று இளம்பெண்ணை இழுத்து செல்வதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற அவர்கள் கஞ்சவாலா என்ற பகுதியில் இளம்பெண்ணின் சடலத்தை நிர்வாண கோலத்தில் மீட்டெடுத்தனர்.

பின்னர் அந்த உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து அதனை சுற்றியுள்ள பகுதியிலுள்ள காவல்துறைக்கும் அளித்த தகவலின் பேரில், அந்த காரை கண்டுபிடித்தனர். அதில் இருந்த 5 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அப்போது அவர்கள் அனைவரும் முழு போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண், தனது ஸ்கூட்டியில் வந்துள்ளார்.

அப்போது இளைஞர்கள் வந்த காரும், அந்த பைக்கும் மோதியதில் அந்த இளம்பெண்ணின் உடை காரில் சிக்கியிருந்துள்ளது. இதனை கவனிக்காத இளைஞர்கள் காரை ஓட்டி சென்றுள்ளனர். சுல்தான்பூரில் இருந்து சுமார் 4 கி.மீ வரை காரில் தரதரவென இழுத்து வரப்பட்டுள்ளார். இதில் அவரது உடை முழுவதுமாக கிழிந்து, சம்பவ இடத்திலேயே நிர்வாண கோலத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்போது கைது செய்யப்பட்ட அனைவரையும் காவல்துறை தங்கள் கஸ்டடியில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்துபோன பெண்ணின் பெயர் அஞ்சலி எனவும், அவரது வயது 20 எனவும் முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. புத்தாண்டின் போது இளம்பெண் நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில் இதில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நாடு முழுவதுமிருந்து பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதற்றமடைய வைத்துள்ளது. அந்த சிசிடிவி காட்சியில் காரில் இளம்பெண் சிக்கியிருந்தது தெரியவந்துள்ளது. மேலும் அந்த பெண் நிர்வாண கோலத்தில் இருப்பது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி பல்வேறு கண்டனங்களை எழுப்பி வருகிறது.

இது குறித்து டெல்லி மகளிர் ஆணையம் தலைவர், ஸ்வாதி மலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லியின் கஞ்சவாலாவில் இளம்பெண் நிர்வாண சடலம் கண்டெடுக்கப்பட்டது. போதையில் சில இளைஞர்கள் அவரது ஸ்கூட்டியை காரில் மோதி பல கிலோமீட்டர் வரை இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் மிகவும் ஆபத்தானது, டெல்லி காவல்துறைக்கு ஆஜராக சம்மன் அனுப்புகிறேன். முழு உண்மையும் வெளிவர வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

அதோடு இந்த சம்பவம் குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "கஞ்சவாலா சம்பவம் குறித்து ஆளுநர் பேசினேன். குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும், அவர்கள் மீது ஐபிசியின் கடுமையான பிரிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன். அவர்கள் உயர் அரசியல் தொடர்புகளை கொண்டிருந்தாலும் மெத்தனம் காட்டக்கூடாது. கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்." என்று குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது டெல்லியில் இளம்பெண் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் காரில் 4 கி.மீ வரை தரதரவென இழுத்து சென்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: TTF வாசன் : நம்பர் பிளேட் இல்லாத காரில் படம் பார்க்க வந்த விவகாரம்.. காவல்துறை தரப்பில் கூறுவது என்ன ?