India

7 வருட காதல் மனைவி, பால்ய நண்பனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்.. டெல்லியில் அதிர்வலை !

டெல்லியைச் சேர்ந்தவர் சன்னி (32) - சரண்யா (30) தம்பதியினர். படித்து கொண்டிருக்கும்போதே 7 வருடங்களாக தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்புகள் இருந்து வந்த நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்தனர். பின்னர் இருவரும் டெல்லி - உத்தர பிரதேச எல்லையில் உள்ள நொய்டாவில் குடியேறினர். அங்கு மருத்துவமனையில் கார்ப்பரேட் பிரிவில் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சன்னி, தனது சிறுவயது நண்பர் சாகர் என்பவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது தனது மனைவிக்கு சாகரை அறிமுகப்படுத்தியுள்ளார் சன்னி. இதனைதொடர்ந்து சாகர் அடிக்கடி சன்னி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சரண்யா மற்றும் சாகர் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்கள் காதலை பரிமாறி கொண்டனர். இந்த விவகாரம் சன்னிக்கு தெரிய வர, அவர் இவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார். இருப்பினும் அதனை செவி சாய்க்காத இருவரும் தங்கள் உறவை தொடர்ந்து வந்தனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சன்னி வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது சாகரும், சரண்யாவும் சந்தித்துள்ளனர். அப்போது எதேர்ச்சியாக வீட்டிற்கு வந்த சன்னி இருவரையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர்களை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட, ஆத்திரமடைந்த சன்னி, அருகிலிருந்த கத்தியை எடுத்து சரண்யா மற்றும் சாகரை குத்தியுள்ளார்.

இதில் இரத்த வெள்ளத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், இருவரது சடலத்தையும் மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். அதோடு சன்னியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நண்பருடன் மனைவி பழகுவதை கண்டித்த பிறகும், மீண்டும் பழகி வந்த நண்பர் மற்றும் மனைவியை கத்தியால் இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பெண் பயிற்சியாளர் முன் TShirt கழட்டி அத்துமீறல்.. BJP அமைச்சர் மீது பாலியல் வழக்குப் பதிவு செய்த போலிஸ்!