India

இளம்பெண்ணை 4 கி.மீ வரை தரதரவென காரில் இழுத்து சென்ற 5 இளைஞர்கள்.. புத்தாண்டின்போது தலைநகரில் பயங்கரம் !

உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டு தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் இந்த புத்தாண்டை இரவு முழுவதும் விழித்திருந்து கொண்டாடினர். அந்த வகையில் தலைநகர் டெல்லியிலும் மக்கள் சிலர் குடி, கூத்து என தங்கள் கொண்டாட்டங்களை சிறப்பாக செய்தனர்.

இப்படி இருக்கையில், இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் சாம்பல் நிற பலேனோ கார் ஒன்று இளம்பெண்ணை இழுத்து செல்வதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற அவர்கள் கஞ்சவாலா என்ற பகுதியில் இளம்பெண்ணின் சடலத்தை நிர்வாண கோலத்தில் மீட்டெடுத்தனர்.

பின்னர் அந்த உடலை மருத்துவமணியாகு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து அதனை சுற்றியுள்ள பகுதியிலுள்ள காவல்துறைக்கும் அளித்த தகவலின் பேரில், அந்த காரை கண்டுபிடித்தனர். அதில் இருந்த 5 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அப்போது அவர்கள் அனைவரும் முழு போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண், தனது ஸ்கூட்டியில் வந்துள்ளார்.

அப்போது இளைஞர்கள் வந்த காரும், அந்த பைக்கும் மோதியதில் அந்த இளம்பெண்ணின் உடை காரில் சிக்கியிருந்துள்ளது. இதனை கவனிக்காத இளைஞர்கள் காரை ஓட்டி சென்றுள்ளனர். சுல்தான்பூரில் இருந்து சுமார் 4 கி.மீ வரை காரில் தரதரவென இழுத்து வரப்பட்டுள்ளார். இதில் அவரது உடை முழுவதுமாக கிழிந்து, சம்பவ இடத்திலேயே நிர்வாண கோலத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்போது கைது செய்யப்பட்ட அனைவரையும் காவல்துறை தங்கள் கஸ்டடியில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு இறந்துபோன பெண்ணின் வயது 23 இருக்கும் என தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர் யார் என்ன என்பது குறித்த விவரங்கள் தெரியவரவில்லை. மேலும் அப்பகுதி சிசிடிவி காட்சிகளும் இன்னும் காவல்துறையால் கைப்பற்றப்படவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து டெல்லி மகளிர் ஆணையம் தலைவர், ஸ்வாதி மலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லியின் கஞ்சவாலாவில் இளம்பெண் நிர்வாண சடலம் கண்டெடுக்கப்பட்டது. போதையில் சில இளைஞர்கள் அவரது ஸ்கூட்டியை காரில் மோதி பல கிலோமீட்டர் வரை இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் மிகவும் ஆபத்தானது, டெல்லி காவல்துறைக்கு ஆஜராக சம்மன் அனுப்புகிறேன். முழு உண்மையும் வெளிவர வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது டெல்லியில் இளம்பெண் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் காரில் 4 கி.மீ வரை தரதரவென இழுத்து சென்ற நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 7 வருட காதல் மனைவி, பால்ய நண்பனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்.. டெல்லியில் அதிர்வலை !