India

பணியை விட்டு நீக்கியதால் ஆத்திரம்.. முதலாளி குடும்பத்தை கொடூரமாக கொன்ற புலம்பெயர் தொழிலாளர்கள்.. -VIDEO!

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் அமைந்துள்ளது அம்ரோலி. இங்கு வேதாந்த டெக்சோ என்ற TEXTILE (நூற்பாலை) ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இதனை கல்பேஷ் தோலாகியா என்பவர் நடத்தி வருகிறார். பல்வேறு ஊழியர்கள் பணிபுரியும் இந்த ஆலையில், உத்தரப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த பல புலம்பெயர் தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசாவைச் சேர்ந்த இரண்டு பேரை இரவு நேர வேலைக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் அந்த நேரம் அசந்து தூங்கியுள்ளனர். இதனால் ஆலையிலுள்ள பொருட்கள் சேதமாகியதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த கம்பெனி ஓனர் கல்பேஷ், அவர்கள் இருவரையும் அழைத்து கண்டபடி வசைபாடியுள்ளார். அதோடு இருவரையும் பணியில் இருந்து நீக்கியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பணியில் இருந்து நீக்கப்பட்ட 2 தொழிலாளர்களும் சேர்ந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி சம்பவத்தன்று இருவரும் தங்கள் முதலாளியை சந்திக்க வேண்டுமென்று உள்ளே சென்றுள்ளனர். அங்கே முதலில் கல்பேஷின் தந்தை தாஞ்சிபாய், அவரது மாமா கன்ஷ்யாம் ரசோடியா ஆகியோரை தாங்கள் கொண்டு வந்த கத்தியை கொண்டு குத்தி கொலை செய்துள்ளனர்.

பின்னர் ஓனர் கல்பேஷை நோக்கி சென்ற அவர்கள், அவரையும் கத்தியால் சரமாரியாக குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இது தொடர்பாக சக ஊழியர்கள் காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு அவர்கள் விரைந்தனர்.

தொடர்ந்து 3 பேரின் சடலத்தை மீட்ட அவர்கள், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், அதிலிருந்த இரண்டு நபர்களை கண்டறிந்தனர். அதில் ஒருவர் சிறுவன் என தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த அதிகாரிகள், சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், மற்றவரை சிறையிலும் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் சிறுவன் உட்பட இரண்டுபேர், தனது முதலாளி உட்பட 3 பேரை கொடூரமாக கொன்றுள்ள சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மனைவியை பழிவாங்க 2 மணி நேரம் போலிஸாரை அலையவிட்ட கணவன்: தாம்பரம் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?