India

இன்று 107 வது நாள்.. 9 மாநிலங்களை கடந்த பயணம்: ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்ற கனிமொழி MP!

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடை பயணத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மாகராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலத்தைக் கடந்து தற்போது அரியானா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

இவரின் இந்த நடைபயணம் 100 நாளை கடந்து இன்று 107வது நாளை எட்டியுள்ளது. ராகுல் காந்தியின் இந்த நடைபயணத்திற்கு பொதுமக்கள் முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் வரை பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். அதேபோல் அனைத்து மாநிலங்களில் செல்லும் போதும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் இவரது நடைபயணத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 107வது நாளான இன்று அரியானா மாநிலம் சோனா அருகே தௌஜ் என்கிற இடத்தில் ராகுல் காந்தி தனது நடைபயணத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில், திமுக சார்பில், மக்களவை தி.மு.க குழு துணைத்தலைவர் கனிமொழி ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் கலந்து கொண்டுள்ளார்.

ராகுல்காந்தியின் நடைபயணம் இன்று இரவு பரிதாபாத்தை அடைகிறது. இதையடுத்து, நாளை டெல்லி செல்லும் ராகுல்காந்தி அங்கிருந்து உத்தரபிரதேசம் செல்கிறார். ஜனவரி 26 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் பயணத்தை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “அன்று காமராஜர்.. இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின்” : ‘நம்ம ஊர் பள்ளி’ திட்டத்திற்கு குவியும் பாராட்டு!