India

சீன் போட நினைத்து சிக்கலில் மாட்டிய இளைஞர்.. பார்ட்டிக்கு சென்றவரை அலேக்காக தூக்கிய டெல்லி போலிஸ் !

வடக்கு கிழக்கு டெல்லியில் அமைந்துள்ளது மெளஜ்பூர். இந்த பகுதியை சேர்ந்தவர் யோகேந்தர் குமார். இவருக்கு ஹர்ஷ் என்ற 22 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த ஞாயற்றுகிழமை இரவு நேரத்தில் துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் சுற்றுவதாக ஷக்தி நகர் என்ற பகுதியில் இருந்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அப்போது தனது பெயர் ஹர்ஷ் எனவும், தான் மெளஜ்பூர் பகுதியை சேர்ந்தவர் என்றும், இங்கு ஒரு பார்ட்டிக்காக வந்ததாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவரிடம் நடத்திய சோதனையில் அதிகாரிகள் நாட்டு துப்பாக்கியை கைப்பற்றினர். அந்த துப்பாக்கியில் குண்டு இருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த துப்பாக்கி குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அது தனது தந்தையின் துப்பாக்கி எனவும், தனது தந்தையின் அலமாரியில் இருந்து தான் எடுத்து வந்ததாகவும், தனது நண்பர்களிடம் காட்டவே எடுத்து சென்றதாகவும் போலீசிடம் தெரிவித்தார்.

மேலும் எனது நண்பர்களிடம் காட்டினால், தனக்கு கொஞ்சம் கெத்தாக இருக்கும், அதனால்தான் அப்படி செய்ததாகவும் கூறினார். தொடர்ந்து துப்பாக்கியை பற்றி காவல்துறையினர் விசாரிக்கையில், அதன் உரிமையாளர் ராகேஷ் சோலங்கி என்பதும், அவருக்கு காவலாளியாக இருந்துவந்த அந்த இளைஞரின் தந்தை யோகேந்தர் குமாரின் பொறுப்பில் அந்த துப்பாக்கி இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே ஹர்ஷ் இதுபோன்ற செயலில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல என்றும், முன்னதாக ஜஃப்ராபாத் காவல் நிலையத்தில் இவர்மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: மயிரிழையில் உயிர்தப்பிய மெஸ்ஸி :அதிர்ந்துபோன ரசிகர்கள்..உலகக்கோப்பை வெற்றி கொண்டாட்டத்தின் போது பரபரப்பு!