India

டெல்லியை தொடர்ந்து கர்நாடகா.. சிறுவனை மாடியில் இருந்து தூக்கி வீசிய ஆரம்ப பள்ளி ஆசிரியர் !

கர்நாடக மாநிலம் கதக் பகுதியில் உள்ளது ஹட்லி பகுதியில் அரசு உதவி பெரும் ஆரம்ப பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆசிரியராக முத்தப்பா எல்லப்பா (45) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் கீதா என்பவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருவது உண்டு.

இந்த நிலையில் நேற்று இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முத்தப்பா, அதே பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் கீதாவின் 10 வயது மகனை அடித்துள்ளார். அதோடு அருகிலிருந்த மண்வெட்டியை எடுத்து சிறுவனை தாக்கியதோடு, அவரை மாடியில் இருந்தும் கீழே தூக்கி போட்டுள்ளார்.

இதனை தடுக்க வந்த ஆசிரியை கீதா மற்றும் மற்றொரு ஆசிரியரையும் முத்தப்பா மண்வெட்டியை கொண்டு தாக்கியுள்ளார். இதில் கீதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கீழே விழுந்த சிறுவனை அருகிலிருந்தவர்கள் மீட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரை சோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து படுகாயமடைந்த கீதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தலைமறைவாக இருக்கும் குற்றவாளி முத்தப்பா மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

தற்போது வரை கொலைக்கான காரணத்தையும் தீவிரமாக விசாரித்து வரும் அதிகாரிகள், சிறுவனின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். கர்நாடகாவில் அரசு உதவி பெரும் ஆரம்ப பள்ளி ஆசிரியர் ஒருவர் 10 வயது சிறுவனை மாடியில் இருந்து தூக்கி போட்டு கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக தலைநகர் டெல்லியில் அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவர் 5-ம் வகுப்பு சிறுமியை கத்தரிக்கோலால் தாக்கி, மாடியிலிருக்கும் ஜன்னல் வழியே தூக்கி வீசி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதையும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தற்போது கர்நாடகாவில் அரங்கேறியுள்ள இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நாட்டை உலுக்கிய சம்பவம் : சிறுமியை மாடியில் இருந்து தூக்கி வீசிய அரசுப்பள்ளி ஆசிரியை.. தலைநகரில் கொடூரம்!