India

50 வயது தாய்க்கு மறுமணம் செய்து வைத்து அழகு பார்த்த பாச மகள்.. நெகிழ்ச்சி சம்பவம்!

மும்பையைச் சேர்ந்தவர் மவுசுமி. இவரது மகள் ஆர்த்தி ரியா சக்ரவர்த்தி. இவர் 2 வயது இருக்கும் போது இவரின் அப்பா உயிரிழந்துவிட்டார். இதனால் தாய் மவுசுமி மறுமணம் செய்து கொள்ளாமல் மகளை கஷ்டப்பட்டு வளர்த்து வந்துள்ளார்.

அப்போது மவுசுமிக்கு 25 வயதுதான் என்பதால், மறு திருமணம் செய்து கொள்ளும்படி உறவினர்கள் பலரும் கூறியுள்ளனர். அப்போது எல்லாம் 'எனக்கு ஒரு கணவன் கிடைத்து விடுவார். ஆனால் மகளுக்குத் தந்தை கிடைக்கமாட்டார்' என கூறி மறுத்தே வந்துள்ளார்.

இந்நிலையில் 50 வயதாகும் தனது தாய்க்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என மகள் ரியா சக்ரவர்த்தி நினைத்துள்ளார். இதற்கிடையில் ரியா சக்ரவர்த்தியின் அத்தை, 'உன் அம்மாவை ஒருவர் விரும்புகிறார்' என கூறியுள்ளார். இதைக்கேட்டு மகள் உற்சாகம் அடைந்துள்ளார்.

பின்னர், இதுபற்றி தாயிடம் தெரிவித்து அவரது ஒப்புதல் வாங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் மவுசுமி-யின் திருமணம் உற்சாகமாக நடந்து முடிந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தைத் தனது இன்ஸ்டாகிராம் மூலம் மகள் ரியா சக்ரவர்த்தி அனைவரிடமும் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து ரியா சக்ரவர்த்தியின் இன்ஸ்டா பதிவில், "அப்பாவின் மரணத்திற்குப் பிறகு நாங்கள் பாட்டி வீட்டிற்குச் சென்றுவிட்டோம். அப்போது எனக்கு 2 வயது. அம்மாவிற்கு 25 வயது. அப்போது எல்லோரும் அவரை மறுமணம் செய்து கொள்ளும்படி கூறினர்.

ஆனால் அவர் எனக்காக திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது அம்மாவுக்கு ஒரு துணையைக் கண்டுபிடித்துவிட்டேன். எனக்கும் ஒரு அப்பாவைக் கண்டுபிடித்துவிட்டேன். தற்போது அம்மா மகிழ்ச்சியாக இருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பதிவை 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் தாய், மகள் இருவருக்கும் இணைய வாசிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: ஆன்லைன் சூதாட்டம் : “உழைத்து சம்பாதிக்கும் பணம் தான் நிலைக்கும்..” - நடிகர் விஷால் காட்டம் !