India

தந்தையை 30 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொன்ற மகன்.. காரணத்தை கேட்டு அதிர்ந்த கர்நாடக போலிஸ் !

கர்நாடகா மாநிலம் முத்தோல் என்ற பகுதியை சேர்ந்தவர் பரசுராம் குலாலி (வயது 54). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 5 பிள்ளைகள் இருக்கும் நிலையில், இவர் குடிபோதைக்கு அடைமையானவராக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி தனது கணவர் பரசுராம் காணவில்லை என்று, அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது இவரது பிள்ளைகளிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் பரசுராமின் 5-வது மகனான வித்தல் குலாலியின் (வயது 21) பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்துள்ளது. இதனால் சந்தேகத்தின் பேரில் அவரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தனது தந்தையை தான்தான் கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் தான் எதற்காக தனது தந்தையை கொன்றேன் என்பது குறித்தும் அதிர்ச்சியளிக்கும் வகையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதாவது, வித்தலின் தந்தை குடிபோதைக்கு அடிமையாக இருந்துள்ளார். தினமும் குடித்துவிட்டு தனது குடும்பத்தை கண்டபடி வசைபாடியுள்ளார். மேலும் வித்தலின் தாயையும் போட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஒருமுறை கோபம் கொண்ட வித்தல், தனது தந்தையை கொன்று விட எண்ணியுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று தனது தந்தையை வெளியே அழைத்து சென்று தூக்க மாத்திரை கலந்த பானத்தை கொடுத்துள்ளார். பின்னர் அவர் மயக்கமடைந்த பிறகு, அவரது தலையில் கல்லை போட்டு கொன்றுள்ளார். மேலும் அவரது உடலை முதலில் போர்வெல்லுக்குள் முழுமையாக போட முயற்சித்துள்ளார்.

ஆனால் அவரது உடல் செல்லவில்லை என்பதால், அதனை துண்டு துண்டாக வெட்டி உள்ளே (30 துண்டுகள்) போட்டுள்ளார். பின்னர் எதுவும் நடக்காதது போல் தனது வீட்டிற்கு சென்றுள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட பரசுராமின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெல்லியில் லிவ்-இன்னில் இருந்து வந்த ஷரதா என்ற இளம்பெண்ணை அவரது காதலனே 35 துண்டுகளாக வெட்டி தூக்கியெறிந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை 2 துண்டுகளாக கணவரே வெட்டியெறிந்துள்ள சம்பவம் அறங்கேறியது.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே டெல்லியில் கணவர் மீது சந்தேகம் இருந்ததால் அவரது இரண்டாவது மனைவி, தனது மகனுடன் சேர்ந்து அவரை கொன்று 22 துண்டுகளாக வெட்டி Fridge-ல் வைத்து தூக்கி வீசியுள்ளது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதோடு அண்மையில் வாடகை வீட்டில் உள்ள ட்ரம்மில் சுமார் 1 ஆண்டு காலமாக பெண்ணின் உடல் பாகங்கள் கிடந்துள்ள நிகழ்வு ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சாலையை கடந்த போது லாரி மோதி உயிரிழந்த யானை.. வனத்துறை விசாரணை: தொடரும் சோகம்!