India

“கிட்னி விற்றால் 6 கோடி..” -விளம்பரத்தை நம்பி 16 லட்சத்தை இழந்த மாணவி :ஆந்திராவை உலுக்கிய ஆன்லைன் மோசடி!

ஆந்திர மாநிலம் குண்டூரை அடுத்துள்ள பிரங்கிபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அந்த பகுதியிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது கை செலவுக்காக இவரது தந்தை தனது ATM கார்டை மகளிடம் கொடுத்துள்ளார்.

ஆனால் மகளோ சில தவிர்க்க முடியாது செலவுகளுக்காக ரூ. 80 ஆயிரம் தனது தந்தை வங்கி கணக்கில் இருந்து எடுத்துள்ளார். இதனை தந்தை பார்ப்பதற்குள் திரும்ப செலுத்த வேண்டும் என எண்ணிய மாணவி, இதற்காக விரைவில் சம்பாதிக்க வேண்டும் என்றும் எண்ணியுள்ளார்.

அதன்படி ஆன்லைனில் கிட்னி நன்கொடையாக அளித்தால் பணம் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு ஒன்றை பார்த்து, அதில் கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்து தனது விவரங்களை பதிவேற்றியுள்ளார். இதையடுத்து மாணவியின் மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், அவரிடம் கிட்னி நன்கொடையாக அளித்தால் அறுவை சிகிச்சைக்கு முன் 3 கோடியும், அறுவை சிகிச்சைக்கு பின் 3 கோடியும் மொத்தம் 6 கோடி வரை பணம் தருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் மாணவியும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் தனியார் வங்கியில் மாணவியின் பெயரில் ஒரு புதிய வங்கி கணக்கை தொடங்கி அதில் 3 கோடி பணம் போடப்பட்டிருப்பதாகவும், அவ்வளவு பெரிய தொகையை எடுக்க வேண்டுமானால் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ், பல்வேறு வரிகள் என்று கூறி, அதற்காக பணம் கேட்டுள்ளனர். மேலும் வங்கி கணக்கில் போடப்பட்டிருப்பதாக இவரது வாட்சப் எண்ணிற்கு போட்டோவும் அனுப்பி வைத்துள்ளனர்.

மாணவியோ கோடி கணக்கில் பணம் வருகிறது என்ற எண்ணத்தில் தனது தந்தையின் வங்கி கணக்கில் இருந்து 16 லட்ச பணத்தை மர்ம நபர்களுக்கு அனுப்பியுள்ளார். இந்த சூழலில் திடீரென அவரது தந்தை தனது வங்கிக்கு சென்று பார்க்கையில், கணக்கில் இருந்த பணம் காணாமல் போயுள்ளது. இதையடுத்து இது குறித்து விசாரிக்க தனது மகளை அழைத்துள்ளார்.

இதனால் பயந்துபோன மாணவி, உடனே தனது தோழியை வீட்டிற்கு சென்று அங்கிருந்து மர்ம நபர்களை தொடர்பு கொண்டு தான் கிட்னியை விற்கப்போவதில்லை எனவும், தனது பணம் திரும்ப வேண்டும் எனவும் கேட்டுள்ளார். இதையடுத்து அந்த நபர்கள் அவரை, டெல்லிக்கு வரச்சொல்லியுள்ளனர். இதை நம்பி அவர் அங்கே சென்ற பிறகு தான், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.

இதனிடையே தனது மகளை காணவில்லை என்று பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் அவரது மொபைல் எண்ணை வைத்து, அவர் தோழி வீட்டில் இருப்பதாய் உறுதி படுத்தினர். பின்னரே நடந்த சம்பவங்கள் அனைத்தும் வெளி வந்தது. இதனைத்தொடர்ந்து பணம் ஏமாந்தது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். தற்போது அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தந்தையின் பணத்தை செலவளித்ததால், ஈடுகட்ட நினைத்த இளம்பெண் ஒருவர், கிட்னி விற்றால் 6 கோடி தருவதாக கூறிய மர்ம நபர்களை நம்பி, மேலும் 16 லட்ச ரூபாய் பணத்தை இழந்துள்ள சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தந்தையை 30 துண்டுகளாக வெட்டி கொடூரமாக கொன்ற மகன்.. காரணத்தை கேட்டு அதிர்ந்த கர்நாடக போலிஸ் !